பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் போது, தோனி பேட்டிங் செய்ய வந்தவுடன் அம்பயர் அவரது பேட்டை வாங்கி, அதன் பின்னர் அதை பரிசோதித்தார். தோனியின் கிரிக்கெட் வாழ்வில் இதற்கு முன் இதுபோல மைதானத்தில் அம்பயர் பேட்டை பரிசோதித்தது இல்லை என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
என்னதான் விதியாக இருந்தாலும், தோனி போன்ற ஒரு ஜாம்பவான் வீரர் விதியை மீறியிருப்பாரா என மைதானத்திலேயே வைத்து பரிசோதித்திருக்கக் கூடாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். 43 வயதாகும் தோனி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் வயதான வீரராகவும் இருக்கிறார். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் விளையாடுகிறார்.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 214 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வந்தது. அப்போது தோனி 6ஆம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். ரவீந்திர ஜடேஜா மறுபுறம் அதிரடியாக ரன் சேர்த்து வந்தார். டெவால்ட் பிரெவிஸ் அம்பயரின் தவறான தீர்ப்பாலும், ரிவ்யூ எடுக்க முடியாத சூழ்நிலையாலும் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
அதன் பின்னர், வெற்றிக்கு ஒரு ஓவருக்கு 15 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் தான் தோனி களமிறங்கினார். கடைசி இரண்டு ஓவர்களில் தோனி அதிரடியாக ஆடி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைப்பார், அதிரடியாக சிக்ஸர்களை விளாசுவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
இந்த நிலையில், தோனி வந்தவுடன் அம்பயர் அவரது பேட்டை வாங்கி, பேட்டின் அளவை அளக்கும் கருவியின் மூலம் பரிசோதித்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அம்பயர்கள் ஒவ்வொரு போட்டியின் போதும் பல்வேறு பேட்ஸ்மேன்களின் பேட்டை வாங்கி பரிசோதித்து வருவது தொடர்கதையாக உள்ளது. விதிப்படி ஒரு பேட் எந்த அளவுகளில் இருக்க வேண்டும், அதிகபட்சம் எவ்வளவு தடிமனாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
ஏனெனில், பேட்டின் அடிப்பகுதி அகலமாக இருந்தால், அதன் மூலம் அதிக சக்தியுடன் பந்தை அடித்தால் பந்து சிக்ஸருக்கு செல்லும் என்ற ஒரு கருத்து உள்ளது. அதற்காக சில பேட்ஸ்மேன்கள் அடிப்பகுதி மட்டும் தடிமனாக இருக்கும் வகையில் விதிகளுக்குப் புறம்பான பேட்களைப் பயன்படுத்துவர்.
அதனால் இந்த ஐபிஎல் தொடரில் பேட்டின் அளவு விதியை மீறியதாக இருக்கிறதா? என அம்பயர்கள் பரிசோதித்து வருகின்றனர். சில பேட்ஸ்மேன்களின் பேட்கள் அந்த அளவை மீறியதாக இருந்தது. அவர்கள் தங்கள் பேட்டை மாற்றிக்கொண்டு வந்து விளையாட வேண்டிய சூழ்நிலையும் அமைந்தது. இந்த நிலையில் தான், தோனியின் பேட்டும் சோதனைக்கு உள்ளானது.
பொதுவாக தோனி அதிக சிக்ஸர்களை அடிப்பவர் என்பதால், அவரது பேட் பரிசோதனைக்கு உள்ளானது. இது குறித்து தான் தோனி ரசிகர்கள், 'அம்பயர் இப்படி செய்திருக்கக் கூடாது' என கூறி வருகின்றனர். ஆனால் ஒரு விளையாட்டில் அவர் எத்தனை பெரிய வீரராக இருந்தாலும், விதிகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா எனப் பரிசோதிப்பது அம்பயர்களின் கடமையாகும்.
இந்தப் போட்டியில் பின்னர் தோனி 8 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரே ஒரு சிக்ஸ் மட்டுமே அவர் அடித்திருந்தார். கடைசி ஓவரில் அவர் நின்று விளையாடியிருந்தால், சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருக்கும். அவர் கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அந்த ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில், 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.