லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் அம்பயர்கள் கடந்த மூன்று போட்டிகளில் விசித்திரமான ஒரு விஷயத்தை செய்து வருகின்றனர். மூன்று போட்டிகளிலும் வெவ்வேறு பேட்ஸ்மேன்களின் பேட்களை வாங்கி அதை பேட் அளக்கும் கருவியின் மூலம் அளந்து உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பேட் அளவு தொடர்பான விதிகளின்படி அந்த பேட் உள்ளதா? என அவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
பேட்டின் அளவு குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் அவருக்கு ஏதேனும் தண்டனை வழங்கப்படலாம் அல்லது அந்த பேட் பறிமுதல் செய்யப்படலாம். ஆனால், ஏன் திடீரென இப்போது ஐபிஎல் தொடரில் பல்வேறு வீரர்களின் பேட்களையும் அம்பயர்கள் பரிசோதித்து வருகின்றனர் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

இதன் பின்னணியில் சில ஐபிஎல் அணிகள் இது குறித்து புகார் அளித்திருக்கலாம். ஏதேனும் வீரரோ அல்லது ஒரு அணியோ அதிரடியாக ரன் குவிப்பதற்காக பேட்டின் எடையை அதிகரிக்க வேண்டியதனால் அளவில் மாற்றம் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பொதுவாக அதிக எடை உள்ள பேட்டை வைத்து ஆடினால் எளிதாக சிக்ஸ் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த பேட்டை கையாள்வது சிரமமாக இருக்கும் என்றாலும் கூட, டி20 போட்டிகளில் 30 அல்லது 40 பந்துகளை மட்டும் தான் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் சராசரியாக சந்திக்கிறார் என்ற பட்சத்தில் அதிக எடை உடைய பேட்டை வைத்து அவர் ஆடுவது சாத்தியமே.
அதன்படி பேட்டின் அளவை சில வீரர்கள் மாற்றி அமைத்து அதிரடியாக ஆடுவதாக யாரேனும் புகார் அளித்திருக்கலாமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லை எனில், அம்பயர்கள் இத்தனை தீவிரமாக ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு பேட்ஸ்மேன்களின் பேட்டை வாங்கி பரிசோதிக்க மாட்டார்கள். இது ஒரு எச்சரிக்கைக்காக செய்யப்படும் பரிசோதனை முயற்சி என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எந்த பேட்ஸ்மேன் அல்லது எந்த அணி செய்கிறதோ அவர்களை நோக்கி இந்த பரிசோதனை நேரடியாக செய்யப்படவில்லை. மாறாக, அனைத்து அணிகளிலும் வெவ்வேறு பேட்ஸ்மேன்களின் பேட்டை வாங்கி பரிசோதிப்பதன் மூலம் 'நாங்கள் இதை தெரிந்து வைத்துள்ளோம், இனியும் அதை செய்யாதீர்கள்' என மறைமுகமாக இதை செய்யும் வீரர் அல்லது அணிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை இது என கூறப்படுகிறது.
நிச்சயமாக இப்போது அதிக எடை உடைய பேட்டை பயன்படுத்தி வருபவர்கள் அதை மாற்றிக் கொண்டு இருப்பார்கள். 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பல போட்டிகளில் 200 ரன்களை சாதாரணமாக எட்டி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த அணிகளில் ஒன்று தான் இதை செய்கிறதா அல்லது அந்த அணிகளை சேர்ந்த யாரேனும் ஒரு வீரர் தான் இதை செய்கிறாரா என்பது குறித்து உறுதியான எந்த தகவலும் இல்லை.