டெல்லி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனை அம்பயர்கள் எச்சரித்தனர். அவர் செய்த ஒரு செயலுக்காக அவரை அழைத்து அம்பயர்கள் எச்சரிக்கை விடுத்தனர். டெல்லி கேப்பிட்டல்ஸ்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 19-வது ஓவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். அவர் வீசிய கடைசி பந்தை எதிர்கொள்ளும் முன் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் அவுட்ஃபீல்டின் உள்வட்டத்திற்கு அருகே சென்று விக்கெட் கீப்பிங் செய்தார்.

பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் அதிக பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களில் விக்கெட் கீப்பர்கள் இதுபோல உள்வட்டத்திற்கு அருகே சென்று விக்கெட் கீப்பிங் செய்வார்கள். ஆனால், இங்கே சஞ்சு சாம்சன் இவ்வாறு செய்ததற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். எனினும், அந்தப் பந்து ஒயிடாக சென்றது. அதன் பிறகு இரண்டு அம்பயர்களும் சஞ்சு சாம்சன் அருகே வந்து அவர் உள்வட்டத்திற்கு அருகே நின்று விக்கெட் கீப்பிங் செய்வது செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். ஆனால் சஞ்சு சாம்சன், "ஜோப்ரா ஆர்ச்சர் 147 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். அப்போது பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும். எனவே பின்னே நிற்கிறேன்" என்றார்.
ஆனால், இந்த பிட்ச் ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் போல அதிக பவுன்ஸ் உடையது அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இதை அடுத்து அம்பயர்கள் அறிவுறுத்தலை ஏற்று அவர் சற்று முன்னே வந்து நின்று விக்கெட் கீப்பிங் செய்தார்.
பின்னர் இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 வது ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுத்தது. மொத்தம் 20 ஓவர்களில் 188 ரன்கள் சேர்த்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 20 ஓவர்களில் 188 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.