மும்பை: 2025 ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா அல்லது ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஐபிஎல் தலைவரான அருண் துமால் இது பற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இரு தரப்பிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. நமது எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கும் தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் போட்டி நிறுத்தப்பட்டதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா அல்லது நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ கூட்டம் நடக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா அதை மறுத்துள்ளார்.
ஐபிஎல் தலைவர் அருண் துமால் இது பற்றி விளக்கமளித்திருக்கிறார். "நாங்கள் இப்போது உள்ள சூழ்நிலை என்ன என ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்ந்து மாறுதலுக்கு உள்ளாகும் சூழ்நிலை. இதுவரை எங்களுக்கு அரசிடம் இருந்து எந்த விதமான உத்தரவும் வரவில்லை. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து விதமான விஷயங்களையும் ஆய்வு செய்த பிறகுதான் நாங்கள் முடிவெடுக்க முடியும்" என்றார்.
மேலும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி திட்டமிட்டபடி லக்னோவில் நடைபெறும் எனவும் கூறியிருக்கிறார். எனினும், இந்தப் போட்டி நடக்குமா அல்லது நிறுத்தப்படுமா என்பது இன்று மாலை தான் தெரியவரும் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தரம்சாலாவில் போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், சில ரசிகர்கள் இதுபோன்ற பதற்றமான சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டுமா என கேள்வி எழுப்பியிருந்தனர். அதை கருத்தில் கொண்டும், தற்போது மக்கள் மத்தியில் நிலவிவரும் மனநிலையை கருத்தில் கொண்டும், பிசிசிஐ ஐபிஎல் தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமா அல்லது வேறு நாட்டுக்கு ஐபிஎல் தொடரை எடுத்துச் செல்லுமா என பல்வேறு கேள்விகள் உள்ளன.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL), ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல ஐபிஎல் தொடரை பிசிசிஐ வேறு நாட்டுக்கு மாற்றுவதாக இருந்தால், தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்படும் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.