மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல இளம் வீரர்கள் மட்டும் இல்லாமல் பல ஸ்டார் வீரர்களுக்கும் தங்களுடைய திறமையை நிரூபிக்க, இந்த தொடர் ஒரு பாலமாக அமைந்திருக்கிறது. அணியிலிருந்து நீக்கப்படும் வீரர்கள் கூட ஐபிஎல் தொடரை சிறப்பாக செயல்பட்டு மீண்டும் தங்கள் நாட்டு அணிக்கு திரும்பியிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடி சாதனை படைத்து மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்று பிரித்விஷா, சர்துல் தாக்கூர் போன்ற வீரர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் நடப்பு மெகா ஏலத்தில் தங்களை யாரும் அணியில் எடுக்காததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மெகா ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் ஐபிஎல் 2025 சீசனில் விலை போகாத வீரர்களால் விளையாட முடியும். உதாரணத்திற்கு தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களில் யாரேனும் காயம் ஏற்பட்டால் ஐபிஎல் அணிகள் விலை போகாத வீரர்களை மீண்டும் ஒப்பந்தம் செய்ய முடியும்.
ஐபிஎல் தொடர் நடைபெற்று பாதி சீசனில் கூட இவ்வாறு மாற்ற முடியும். அந்த வகையில் டேவிட் வார்னர், சர்துல் தாக்கூர், பிரித்வி ஷா ஆகியோர் திறமை பாய்ந்த வீரர்களாக இருப்பதால் ஏதேனும் ஒரு அணி வீரர்கள் காயம் ஏற்பட்டால் இவர்கள் மாற்று வீரர்களாக உள்ளே வரலாம்.இதனால் பிரித்வி ஷா, சர்துல் தாக்கூர் போன்ற வீரர்கள் தங்களுடைய நம்பிக்கையை இழக்காமல் சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும்.
இப்படித்தான் 2011 ஆம் ஆண்டு சீசனில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த சூழலில் ஆர் சி பி அணியின் ஒரு வீரர் காயம் அடைந்ததால் மாற்று வீரராக அணிக்குள் வந்த கிறிஸ் கெயில் மிகப்பெரிய சாதனையை படைத்து ஐபிஎல் தொடரில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். இதனால் வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் பிரித்வி ஷா, டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.