மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி குறித்து, முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் சில அதிரடியான கருத்துக்களைப் பேசியிருக்கிறார்.
வைபவ் சூர்யவன்சி தற்போது டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி வருகிறார். ஆனால், அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும், அதுதான் உண்மையான சவால் என்று யோக்ராஜ் சிங் கூறியுள்ளார். மேலும், மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்றால், அதற்கு ஏற்ப அவரது உடல் தகுதி இன்னும் மேம்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இது பற்றி யோக்ராஜ் சிங் கூறுகையில், "வைபவ் சூர்யவன்சியால் ஐந்து நாட்களும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியுமா? அதுதான் ஒரு கிரிக்கெட் வீரர் முன் இருக்கும் உண்மையான சவால். எனது பார்வை எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் மீதுதான் இருக்கும். அதை ஆடுபவரால் ஐந்து நாட்கள் தாக்குப்பிடிக்க முடியுமா? அதுதான் உண்மையான தேர்வு."
"50 ஓவர்கள் நீங்கள் ஆடுவது எளிது. 20 ஓவர்கள் வரை நீங்கள் ஆடுவதும் எளிது. இந்த கிரிக்கெட் வடிவங்களை வைத்து நான் முடிவு செய்ய மாட்டேன். ஆனால், நீங்கள் மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களும் ஆட வேண்டும் என்றால், அதற்கேற்ற உடல் தகுதியை வைத்திருக்க வேண்டும்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஏன் டெஸ்ட் போட்டிகளில் ஏதோ ஒரு இடத்தில் தடுமாறுகிறீர்கள்? ஏனென்றால், நீங்கள் டி20 போட்டி, ஐபிஎல் மற்றும் 50 ஓவர்களில் தான் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். இன்று 50 ஓவர் போட்டியில் கூட விளையாட முடியாமல் திணறுகிறார்கள். அந்த இடத்தில் தான் நாம் இருக்கிறோம். அனைத்துப் பயிற்சியாளர்களும், நிர்வாகிகளும் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டு செயல்படுகிறார்கள். நான் 48 டிகிரி செல்சியஸில் நின்று வேலை செய்வேன். யுவராஜ் சிங் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கான ஆர்வம் என்னிடம் உள்ளது," என்றார் யோக்ராஜ் சிங்.