பாட்னா: ஐபிஎல் தொடர் என்பது நாட்டுக்காக விளையாடப்படும் விளையாட்டு கிடையாது. ஒரு தனிப்பட்ட ஒரு தனியார் அணிக்காக வீரர்கள் பங்கு பெற்று விளையாடுவார்கள். அப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்சி ஒரு சாதனை செய்ததை பாராட்டி அவருக்கு அரசு ஒரு பரிசு தருகிறது என்றால் அது எவ்வளவு பெரிய ஆச்சரியம்.
நாட்டுக்காக விளையாடும் வீரர்களுக்கு பரிசு தந்து பார்த்திருப்போம். ஆனால் இங்கு முதல் முறை ஒரு தனியார் அமைப்பில் விளையாடி சாதனை படைத்த வீரருக்கு பீகார் அரசு தற்போது பரிசு தொகையை அறிவித்திருக்கிறது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தான் வைபவ் சூர்யவன்சி, இவர் 14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி பட்டையை கிளப்பி இருக்கிறார். இந்த நிலையில் வைபவ் சூரியவன்சி குஜராத்துக்கு எதிராக 35 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இவருடைய ஆட்டத்தை பாராட்டி தற்போது பீகார் அரசு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், "பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். பீகார் மாநிலத்திலிருந்து வந்து பெருமை சேர்த்திருக்கிறார்."
"இதனால் அவருடைய சாதனையை பாராட்டி 10 லட்சம் ரூபாய் மாநில அரசு சார்பாக பரிசு தொகையை அறிவிக்கின்றேன். வைபவ் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பீகாரில் உள்ள ஒவ்வொருவரும் வைபவை நினைத்து பெருமை கொள்கிறோம்."
"கடந்த ஆண்டு வைபவையும் அவருடைய தந்தையும் நான் நேரில் பார்த்து வாழ்த்தினேன். தற்போது அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்" என்றும் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக ஒரு வீரர் அரசிடம் இருந்து பரிசுத் தொகை பெறுவது என்பது இதுவே முதல் முறையாகும்.