ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடுவதை பெற்றோர்கள் பார்த்திருந்தார்கள் என்றால் 90s கிட்ஸ் 2கே கிட்ஸ் என இரண்டுதலைமுறையில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் திட்டு கிடைத்திருக்கும்.
14 வயது வீரர் ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் சாதனை படைத்து அசத்தியது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் இவருடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு நம்மை பெரியவர்கள் கழுவி ஊற்றி இருப்பார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு ஒரு மகத்தான சாதனையை வைபவ் சூரியவன்ஷி படைத்திருக்கிறார்.

14 வயதில் கோடைகால விடுமுறையை எப்படி கொண்டாடலாம் என மற்ற குழந்தைகள் யோசித்து இருக்கும் நிலையில், வைபவ் சூர்யவன்சி உலக சாதனை படைத்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப் போட்டிக்கு தான் எவ்வாறு தயாராகினேன் என்று வைபவ் பேசியிருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம்.
உண்மையிலே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. இது ஐபிஎல் வரலாற்றில் என்னுடைய முதல் சதமாகும். என்னுடைய மூன்றாவது இன்னிங்ஸ்லே இது கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பயிற்சி முகாமில் கடுமையாக உழைத்து வருகின்றேன். அதற்கான முடிவுகள் தான் தற்போது கிடைத்திருக்கிறது என்று நினைக்கின்றேன். இந்த தொடருக்கு முன்பே நான் பலவிதமான பயிற்சிகளை மூன்று மாதமாக எடுத்து வருகின்றேன்.
எனக்கு என தனி யுக்திகள் எல்லாம் கிடையாது. பந்தை பார்த்து அடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் நான் செய்கின்றேன். ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுடன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தது என்ன செய்ய வேண்டும்? காலத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து ஜெய்ஸ்வால் எனக்கு சொல்லித் தருவார்.
எனக்கு நேர்மறையான எண்ணங்களை ஜெயிஸ்வால் செலுத்துவார். ஐபிஎல் தொடரில் சதம் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது தற்போது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் களத்தில் விளையாடும் போது எனக்கு பயம் என்பதே கிடையாது. நான் பெரியதாக எதையும் பற்றி யோசிக்க மாட்டேன். என்னுடைய முழு கவனமெல்லாம் களத்தில் விளையாடுவது குறித்து தான் இருக்கும் என்று வைபவ் சூர்யவன்சி கூறியுள்ளார்.