மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வீரர் என்றால் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி தான். ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன வைபவ் சூரியவன்ஷி 14 வயதிலேயே தான் எவ்வளவு பெரிய திறமையான வீரர் என்பதை காட்டிவிட்டார்.
ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் தான் வைபவ் சூரியவன்ஷியை ராஜஸ்தான் அணி பிளேயிங் லெவனில் சேர்த்தது. இந்த சூழ்நிலையில் லக்னோ அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் வைபவ் சூர்யவன்சி 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார்.

குறிப்பாக ஆவேஷ் கான், சர்துல் தாக்கூர் போன்ற பவுலர்களுக்கு எதிராக சிக்சர்களை அடித்து அசத்தினார். இதனால் வைபவ் சூரியவன்சி ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆக மாறினார். இந்த போட்டியில் வைபவ் சூரியவன்சி ஆட்டமிழந்தவுடன் கண்ணை தேய்த்தபடியே அழுது கொண்டே வந்ததாக செய்திகள் உலா வந்தது.
முதல் போட்டியில் சிக்ஸர்கள் அடித்து விட்டு ஆட்டம் இழந்தவுடன் அழுததன் மூலம் தான் ஒரு சிறுவன் என்பதை வைபவ் நிரூபித்து விட்டதாக பலரும் கிண்டல் அடித்து வந்தனர். இந்த சூழலில் இந்த விஷயம் குறித்து வைபவ் சூரியவன்ஷி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் எப்போது அழுதேன் என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
என் கண்கள் கூசியது. அதுதான் உண்மை. நான் ஆட்டம் இழந்தவுடன் பெரிய ஸ்கிரீனில் நான் எவ்வாறு அவுட் ஆனேன் என்பதை பார்த்தேன். அப்போது மைதானத்தில் இருந்த மின்விளக்குகள் கூச்சம் என் கண்ணை பாதித்தது. இதனால் கண்களை தேய்த்துக் கொண்டு நடந்தேன். அதை பார்த்தவுடன் மக்கள் நான் அழுத விட்டதாக நினைத்திருக்கிறார்கள்.
ஆனால் நான் அழவில்லை. வெளிச்சம் தான் காரணம் என்று வைபவ் சூரியவன்ஷி விளக்கம் அளித்துள்ளார். வைபவ் சூரியவன்ஷியின் இந்த விளக்கம் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை ஆறு போட்டுகளில் விளையாடியுள்ள சூரியவன்ஷி 195 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 219 என்ற அளவில் இருக்கிறது. வைபவ் சூரியவன்ஷி சராசரி 32 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று சிஎஸ்கே அணி எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.