மும்பை: 14 வயதாகும் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பாதுகாப்பது பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் மற்றும் மீடியாவின் கடமை என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு 16 வயதாகும் போது கொடுத்த ஆதரவை, வைபவ் சூர்யவன்ஷிக்கும் அனைவரும் அளிக்க வேண்டும் என்று கிரேக் சேப்பல் அறிவுறுத்திய நிலையில், பிரித்வி ஷா மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோரை போல் தடம் மாறி போய்விடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமாகியுள்ள 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த அவர், தனது 3வது இன்னிங்ஸிலேயே 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதனால் கிரிக்கெட் உலகமே ஆடிப்போயுள்ளது.

அதேபோல் வைபவ் சூர்யவன்ஷி-க்கு அதீத பாராட்டுகளையும், புகழையும் சோசியல் மீடியா அளித்து வருகிறது. இன்னொரு பக்கம் அவர் மும்பை அணிக்கு எதிராக டக் அவுட்டாகி வெளியேறிய போது, பலரும் அவரை கிண்டல் செய்தனர். சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி இதுபோன்ற விஷயங்களை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி கிரிக்கெட் வீரர்களுக்கே எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கிரேக் சேப்பல், வைபவ் சூர்யவன்ஷியை பிசிசிஐ பெரும் நடவடிக்கை மூலம் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து கிரேக் சேப்பல் பேசுகையில், 16 வயதில் ஒரு டீனேஜ் இளைஞராக இருந்த சச்சின் டெண்டுல்கர் சாதித்ததற்கு பின் திறமை மட்டும் இல்லை. அவருக்கு ஆதரவாக இருந்த சிஸ்டம் இருக்கிறது.
சிறந்த பயிற்சியாளர், சிறந்த குடும்பம் அவரை உலகம் என்ற சர்க்கஸில் இருந்து காப்பாற்ற தயாராக இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கம் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான திறமை கொண்ட வினோத் காம்ப்ளி இருந்தார். இன்னும் சொல்லப் போனால் சச்சினை விடவும் ஒரு அடி சிறப்பாக ஆடினார். ஆனால் புகழ் வந்தபின் அவரிடம் இருந்த ஒழுக்கம் மாறிப்போனது.
மிகப்பெரிய உயரத்திற்கு சென்றபின், அவர் சரியத் தொடங்கினார். கிட்டத்தட்ட வினோத் காம்ப்ளியை போல்தான் பிரித்வி ஷாவும். உச்சத்தில் இருந்து சரிந்துவிட்டார் என்று சொல்லலாம். அவருக்கு மீண்டும் தனது பாதையை அடைய வாய்ப்புகள் இன்னும் திறக்கப்பட்டிருக்கிறது. அதனால் வைபவ் சூர்யவன்ஷியை பிசிசிஐ சிறந்த சிஸ்டத்தை வைத்து பாதுகாக்க வேண்டும்.
பிசிசிஐ நிர்வாகம், ஐபிஎல் அணி நிர்வாகம், பயிற்சியாளர், மீடியா அனைவரும் சேர்ந்தே பாதுகாக்க வேண்டும். வைபவ் சூர்யவன்ஷியை திறமையை ஒரு பப்பிளில் வைத்து சுற்றி வைத்து பாதுகாக்க வேண்டும். அதுதான் வைபவ் சூர்யவன்ஷியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும். இனி யு19 வீரர்களின் அணிகளுடன் ஒரு மனநல ஆலோசகர் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.