IPL 2025: மைதானத்தை ஆக்கிரமித்த கோலி ரசிகர்கள்.. பறந்த போர் ஜெட்கள்.. ராணுவ வீரர்களுக்கு மரியாதை
அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.ஆர் சி பி அணி,18 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று அந்த அணி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக அஹமதாபாத்தில் விராட் கோலி ரசிகர்கள் குவிந்து இருக்கிறார்கள். சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சூழ்ந்துள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் ஆர்சிபியின் சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் வருகின்றனர். ஆரம்பத்தில் மழை தூரல் தூவினாலும், அது உடனே நின்றது. இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்திருக்கிறார்கள். மேலும் இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும், ரிசர்வ் டே நாளை அறிவிக்கப்பட்டிருப்பதால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்.
இந்த சூழலில் பாகிஸ்தான் எதிரான போர் ஏற்பட்ட நிலையில், இதில் நமது நாட்டு ராணுவ வீரர்கள் சேவையை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நரேந்திர மோடி மைதானத்தில் ஜெட் விமானங்கள் பறந்தது. அப்போது விமானங்கள் இந்திய தேசிய கொடியின் நிறத்தை புகையாக வெளியிட்டவாறு சாகசத்தில் போர் விமானங்கள் ஈடுபட்டது. இதனை ரசிகர்கள் கண்டு களித்தனர்.
மழை தற்போது நின்றதால் மைதானத்தை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டபடி இன்று போட்டி நடந்து முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் போடுவதற்கு முன்பு விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் பலரும் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இதனிடையே விராட் கோலி ரசிகர்கள் அகமதாபாத் மைதானத்தில் சூழ்ந்திருப்பதை பார்த்தால், 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நினைவுக்கு வருவதாகவும் அப்போது இந்திய அணி தோல்வியை தழுவியதை குறிப்பிட்டு இது போல் ஒரு இதயம் நெருங்கும் சம்பவத்தை ஆர் சி பி அணி அவர்களது ரசிகர்களுக்கு கொடுத்து விட வேண்டாம் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications