மும்பை: ஐபிஎல் 2025 தொடரின் பிளேஆஃப் போட்டிகள் வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. முக்கியமான நாக்-அவுட் போட்டிகளுக்கு முன்னதாக ஆர்சிபி அணி பட்டத்தை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ளது.
இந்த சீசனிலும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது அபாரமான பேட்டிங் செயல்பாடுகளால் ஆர்சிபி அணியின் முதன்மை பேட்ஸ்மேன் ஆக விளங்குகிறார். இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 602 ரன்கள் குவித்து, 60.20 சராசரியுடனும், 147.91 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் உள்ளார்.

இந்த சீசனில் விராட் அபாரமான ஃபார்மில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் பிளேஆஃப் நிலைகள் எந்த வீரருக்கும் பெரும் சவாலாக உள்ளன. முன்னாள் ஆர்சிபி கேப்டனான கோலி, அழுத்தமான சூழல்களில் போட்டியை வெல்லும் இன்னிங்ஸ்களை தொடர்ந்து ஆடி, அணியின் முக்கிய வீரராக விளங்கி வருகிறார்.
கடந்த 17 ஆண்டுகளில் ஆர்சிபி ஒரு முறை கூட பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது இந்த அணிக்கு பிரச்சினையாக இருந்ததில்லை. பத்தாவது முறையாக ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளது. 2008-ல் ஐபிஎல் தொடங்கப்பட்டதிலிருந்து விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்,
மேலும் அணியின் ஒவ்வொரு பிளேஆஃப் போட்டியிலும் பங்கேற்ற ஒரே ஆர்சிபி வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் கோலி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளில் அவரது சாதனை அவ்வளவு சிறப்பாக இல்லை.
ஆர்சிபி அணிக்காக 15 நாக்-அவுட் போட்டிகளில் விளையாடிய கோலி, 26.23 சராசரியுடன் 341 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 121.79 ஆக உள்ளது. இந்தப் போட்டிகளில் அவர் இரண்டு முறை மட்டுமே 50 ரன்கள் மேல் எடுத்துள்ளார். ஐபிஎல் பிளேஆஃபில் அவரது கடைசி அரைசதம் 2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வந்தது, அந்தப் போட்டியில் பெங்களூரு அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முன்னாள் ஆர்சிபி கேப்டனான கோலி, அந்தப் போட்டியில் 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து, பரிந்தர் ஸ்ரானால் ஆட்டமிழந்தார்.