பெங்களூர் : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்குப் பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி என்றால் அது ஆர்சிபி தான். விராட் கோலி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் விளையாடி இருக்கிறார்கள்.
ஆனால் 17 சீசன்களாக விளையாடும் ஆர்சிபி அணி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது. இந்த நிலையில் விராட் கோலி முதல் சீசனில் இருந்து தொடர்ந்து 17 ஆண்டுகளும் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார்.

ஒரு முறை ஆர்சிபி அணியை விட்டு நீங்கள் விலகுவீர்களா என்று கேள்வி கேட்டபோது, அதற்கு விராட் கோலி முடியவே முடியாது என்று பதில் அளித்தார். எனக்கு ஆர்சிபி மீது தீவிர விசுவாசம் இருக்கின்றது. நான் வளர்ந்து வரும் கட்டத்தில் இருந்தே என்னை நம்பி அவர்கள் எனக்கு முழு ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை ஆர்சிபி அணி என்னை நீக்கி விட்டால் நான் இனி ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டேன் என்று எல்லாம் விராட் கோலி கூறி இருந்தார்.
இப்படி பேசிய விராட் கோலி தான் ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணியில் இருந்து விலகிவிடலாம் என்று எண்ணத்தில் இருந்து இருக்கிறார். இதுகுறித்து ராபின் உத்தப்பாவிடம் விராட் கோலி பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஆர்சிபி அணி உடனான என்னுடைய பயணத்தை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
ஆர்சிபி உடனான பந்தத்தை நான் மிகவும் மதிக்கின்றேன். அதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது. முதல் மூன்று ஆண்டுகளில் நான் பெரிய அளவில் எதுவும் சாதிக்கவில்லை. ஆனால் எனக்கு ஆர்சிபி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளித்தது. வீரர்கள் தக்க வைக்கும் முறை வந்தபோது கூட ஆர்சிபி அணி என்னை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
அப்போது நான் ஆர்சிபி அணி நிர்வாகத்திடம் நான் இந்தியாவுக்காக மூன்றாவது வீரராக களம் இறங்குகிறேன். இதைப் போன்று ஆர்சிபி அணியிலும் நான் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும் என கூறினேன். அதற்கு ஆர்சிபி அணி சரி நீங்கள் மூன்றாவது வீரராக விளையாடுங்கள் என எனக்கு அனுமதி அளித்தது. அவர்கள் தான் என் மீது நம்பிக்கை வைத்து இருந்தார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் நான் வளர்ந்து வரும் தருணத்தில் ஆர்சிபி அணியின் இந்த ஆதரவு எனக்கு மிகவும் முக்கியமான விஷயமாக தெரிந்தது. நான் ஒரு விஷயத்தை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். வீரர்களை தக்க வைக்கும் முறை வந்தபோது என்னை ஒரு அணி தேர்வு செய்ய விரும்பினார்கள். ஆனால் நான் எனது கோரிக்கையை அவர்களிடம் வைத்தேன்.
ஆனால் நான் ஐபிஎல் தொடரில் அப்போது ஐந்து அல்லது ஆறாவது வீரராக தான் விளையாடிக் கொண்டிருந்தேன். இதனால் எனக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கொடுத்தால் நான் விளையாடுவேன் என்று கூறினேன். ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு நான் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தேன். 2011 ஆம் ஆண்டு வீரர்களை தக்க வைக்கும் முறை வந்த போது என்னிடம் மீண்டும் அதே அணி வந்து நீங்கள் ஏலத்தில் பங்கேற்கிறீர்களா?
நாங்கள் உங்களை எடுக்க விருப்பப்படுகிறோம் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு நான் வாய்ப்பே இல்லை. நான் ஆர்சிபி அணியில் தான் இருப்பேன். அவர்கள் தான் என்னை நம்பி ஆதரவு அளித்து இருக்கிறார்கள் என்று பதில் அளித்து விட்டேன் என்று விராட் கோலி கூறியிருக்கிறார்.
விராட் கோலியே ஒரு கட்டத்தில் வேறு அணிக்கு செல்லலாம் என நினைத்தபோது ஆர்சிபி அணி அதனை சரியாக புரிந்து கொண்டு விராட் கோலி கோரிக்கையை நிறைவேற்றியது. இதனால் அவர் தொடர்ந்து அந்த அணியில் விளையாடினார். அது மட்டுமல்லாமல் 2013 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.