மும்பை : ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு விராட் கோலியின் ஆண்டு ஊதியம் மூன்று கோடி ரூபாய் வரை அதிகரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவோ இல்லை ஆர்டிஎம் கார்டு மூலம் மீண்டும் வாங்கவோ முடியும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி முதலாவதாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 18 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும்,நான்காவது வீரர்களுக்கு 18 கோடி ரூபாயும்,ஐந்தாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும் வழங்கப்படும் என தெரிகிறது.

இதேபோன்று இந்திய அணிக்காக விளையாடாத வீரர்களை நான்கு கோடி ரூபாயில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் பிசிசிஐ அறிவித்தது. இந்த சூழலில் ஆர்சிபி அணி விராட் கோலியை தான் முதல் வீரராக தக்க வைத்துக் கொள்ளும் என்பது சிறிய குழந்தைக்கு கூட தெரியும். அந்த வகையில் விராட் கோலி கடந்த 2022 மெகா ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ளப்பட்டார்.
ஆனால் அவரை விட ஆர் சி பி அணியில் இடம் பிடித்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர் கேமரான் கிரீனுக்கு அதிக ஊதியம் கிடைத்தது. கேமரான் கிரீன் 17 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதால், அவர்தான் கோலியை விட அதிக பணம் வாங்கிக் கொண்டு இருந்தார். இதேபோன்று ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 11 கோடி ரூபாய்க்கும் ஆர்சிபி அணியின் கேப்டனான டுபிளசிஸ் 7 கோடி ரூபாய்க்கும் ஆர் சி பி அணியால் வாங்கப்பட்டிருந்தார்கள்.
தற்போது ஆர்சிபி அணி விராட் கோலியை 18 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ள போகிறது. இதன் மூலம் விராட் கோலியின் ஊதியம் மூன்று கோடி ரூபாய் வரை உயர வாய்ப்பு இருக்கிறது. இதனை அடுத்து 17 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணியிலிருந்து வாங்கப்பட்ட கேமரன் கிரீன் இரண்டாவது வீரராக தக்க வைக்க ஆர் சி பி முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
இதன் மூலம் கேமரன் கிரீன் சம்பளம் 14 கோடி ரூபாயாக இருக்கும். இது முந்தைய சம்பளத்தை விட மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் குறைவாகும். இதன் பின்னர் டுபிளசிசை ஆர் சி பி அணி மூன்றாவது வீரராக தக்க வைத்துக் கொள்ள நினைத்தால் அவருடைய சம்பளம் ஏழு கோடி ரூபாயிலிருந்து 11 கோடி ரூபாயாக உயர வாய்ப்பு இருக்கிறது. மேக்ஸ்வெல் கடந்த சீசனில் பாதியின் விலகியதால் அவர் மீண்டும் தக்கவைக்கப்பட வாய்ப்பு இல்லை.