மும்பை: அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஓய்வு பெற வாய்ப்பில்லை என்று நட்சத்திர வீரர் விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 ஆண்டுகளில் ஒருமுறையாவது ஆர்சிபி அணிக்காக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆர்சிபி அணி தரப்பில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.21 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக 18 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே அணிக்காக விளையாடும் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறவுள்ளார். 35 வயதை எட்டியுள்ள விராட் கோலி, ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் விராட் கோலி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று சில குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஆர்சிபி அணி தரப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஓய்வு குறித்து விராட் கோலி சூசகமாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், அடுத்த மெகா ஏலம் வரும் போது ஆர்சிபி அணியில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துவிடுவேன். அதனை நினைக்கும் போதே, ஸ்பெஷலான உணர்வு ஏற்படுகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கும் போது ஒரே அணிக்காக தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என்று நினைத்திருக்கவில்லை. இந்த 17 ஆண்டுகளில் எனக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையிலான உறவு வலுவாகி கொண்டே போகிறது.
அதேபோல் ஆர்சிபி அணியை தவிர்த்து வேறு எந்த அணிக்கும் செல்ல விரும்பவில்லை. அது நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இம்முறையும் ஒரு மிகச்சிறந்த வலுவான அணியை கட்டமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஒரு அணியாகவும் அதனை எதிர்பார்த்திருக்கிறோம். எனக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையிலான பிணைப்பு அனைவருக்கும் தெரிந்திருப்பது மகிழ்ச்சி தான்.
அடுத்த 3 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடுவது உற்சாகமாக உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ஒருமுறையாவது ஆர்சிபி அணிக்காக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு கிடையாது என்று சூசகமாக கூறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.