லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடினார். 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த அவர், மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசி, 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். அவரது ஆட்டம் தான் அந்த அணிக்கு வலுவான அடித்தளத்தை இட்டது.
இந்த நிலையில், அபிஷேக் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய போது, மூத்த வீரரான விராட் கோலி அவரது முகத்துக்கு நேரே வந்து, அவரது விக்கெட் வீழ்ச்சியை ஆக்ரோஷமாக கொண்டாடினார். மேலும், கோபமாக அவரிடம் ஏதோ கூறினார். இதை சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

முந்தைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி இதேபோல அபிஷேக் ஷர்மாவின் விக்கெட் வீழ்ச்சியை 'புத்தகத்தில் குறித்து வைப்பது' போல கொண்டாடினார். அப்போது அபிஷேக் ஷர்மா அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால், விராட் கோலி மூத்த வீரர் என்ற நிலையில், கோலி செய்த செயலுக்கு அபிஷேக் சர்மா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை; மௌனமாக அவரை கடந்து சென்றுவிட்டார். இதையும் பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். வேறு ஒரு இளம் வீரர் இதுபோல செய்திருந்தால் நிச்சயமாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருப்பார் எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மேலும், திக்வேஷ் ரதி விக்கெட் வீழ்ச்சியை முகத்துக்கு நேராக கொண்டாடியதற்காக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, விராட் கோலி இதே போல அடிக்கடி செய்து வருகிறார், ஆனால் அவருக்கு எந்தவிதமான அபராதம் விதிக்கப்படுவதில்லை என்பதையும் சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த போட்டியில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்ததற்குப் பிறகு, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினார். அவர் 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தார். இதை எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார். ஃபிலிப் சால்ட் 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தார். ஆனாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.