முல்லான்பூர்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரைப் பார்த்து அவரைச் சீண்டும் வகையில் நடனமாடியும், சைகை செய்தும் இருந்தார். அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்ப்பு தெரிவித்து விராட் கோலியுடன் சில வார்த்தைகளைப் பேசினார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், விராட் கோலி எதிரணியைச் சீண்டும் வகையில் நடந்து கொண்டதால் அவருக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என ஒரு தரப்பு ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இளம் வீரர்கள் இதுபோல செய்தால் மட்டும் அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது, ஆனால் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எந்தத் தண்டனையும் பிசிசிஐ அளிப்பதில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி விக்கெட் வீழ்த்திவிட்டு, பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறும் போது ஒரு புத்தகத்தை எடுத்து அதில் இந்த விக்கெட்டை வீழ்த்திவிட்டதாகக் குறித்து வைப்பது போல சைகை செய்தார். இரண்டு முறை அதுபோல செய்ததால், அந்த இரண்டு முறையும் அவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. எதிரணி வீரரை சீண்டும் வகையில் நடந்து கொண்டதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டதாகப் பொது விளக்கமும் அளிக்கப்பட்டது.
எதிரணி வீரர்களைக் கோபமடையச் செய்தல், தூண்டுதல், சீண்டுதல் போன்ற செயல்களைச் செய்தால் அதற்குத் தண்டனை அளிக்கப்படும். இது ஐபிஎல் விதிமுறைகளில் உள்ளது. அதன்படி பார்த்தால், நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 158 ரன்கள் என்ற இலக்கை சேசிங் செய்த பிறகு, விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயரைப் பார்த்து கேலி செய்யும் வகையில் நடனம் ஆடினார்.
அந்தப் போட்டியில் விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெற்றிக்கான ரன்களை அடித்த பிறகு விராட் கோலி அவ்வாறு நடனம் ஆடினார். அதைக் கண்டு ஸ்ரேயாஸ் ஐயர் கோபமடைந்தார். நேராக விராட் கோலியிடம் சென்று அது பற்றிப் பேசினார்.
பின்னர் இருவரும் சமாதானமாகச் சென்றனர். எனினும், திக்வேஷ் ரதிக்கு இது போன்ற செயலை செய்ததால் தண்டனை அளிக்கப்பட்ட நிலையில், விராட் கோலிக்குத் தண்டனை அளிக்கப்படுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.