பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை விராட் கோலி பெரிதாகக் கொண்டாடவில்லை. அது குறித்து ரசிகர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி வருகின்றனர். நடிகையின் புகைப்படங்களை விராட் கோலி லைக் செய்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக மாறியிருக்கும் நிலையில், அதன் காரணமாகவே விராட் கோலி சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றியை பெரிதாகக் கொண்டாடவில்லை என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அதுதான் உண்மையான காரணமா அல்லது வேறு காரணங்களால் விராட் கோலி இந்த வெற்றியை பெரிதாகக் கொண்டாடவில்லையா என்ற சந்தேகமும் உள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாகச் சென்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 33 பந்துகளில் 62 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 33 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் வெறும் 14 பந்துகளில் 53 ரன்களை அடித்து நொறுக்கினார்.
அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் ஆயுஷ் மத்ரே 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 45 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்திற்குச் சென்றது. மேலும், அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதாகவே கூறப்படுகிறது. இந்த முக்கிய வெற்றியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெரிதாகக் கொண்டாடியிருக்க வேண்டும்.
ஆனால் அந்த அணியின் இளம் வீரர்கள் இதைக் கொண்டாடினாலும், மூத்த வீரரான விராட் கோலி ஓய்வறையில் தனது பகுதியில் மிகவும் அமைதியாகவே அமர்ந்திருந்தார். போட்டி முடிந்தவுடன் ஆடுகளத்திற்கு வந்து அவர் அனைவருடனும் கைகுலுக்கிவிட்டு அமைதியாகவே காணப்பட்டார்.
இதற்குக் காரணம், சமூக வலைத்தளங்களில் அவரைக் குறித்து பரவி வரும் ஒரு வதந்திதான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அவ்னீத் கவுர் என்ற நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து லைக் செய்யப்பட்டிருந்தது. அது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
எதற்காக ஒரு பாலிவுட் நடிகையின் புகைப்படத்தை விராட் கோலி தொடர்ந்து லைக் செய்து இருக்கிறார் என அவர்கள் பல்வேறு வதந்திகளையும் பரப்பி வந்தனர். இது குறித்து விராட் கோலி பின்னர் விளக்கம் அளித்தார். இன்ஸ்டாகிராமில் தனக்குக் காட்டப்பட்ட பதிவுகளை நீக்கிக்கொண்டிருந்தபோது, தவறுதலாக இவ்வாறு நேர்ந்திருக்கலாம் எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் காரணமாகத்தான் அவர் அமைதியாகக் காணப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா எனத் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ரசிகர்கள் இதையே ஒரு சாக்காக வைத்து அவரை விமர்சித்து வருகின்றனர்.