சென்னை: ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 3 சீசன்களில் 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஆனால் குஜராத் அணியோ அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது.
கடந்த சீசனின் போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை மைதானத்தில் வைத்தே அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா வெளுத்து வாங்கினார். இதன்பின் இருவரும் சமாதானம் ஆகினாலும், கேஎல் ராகுலுக்கு அவமரியாதை நேர்ந்ததாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மெகா ஏலத்திற்கு முன் கேஎல் ராகுலை லக்னோ அணி நிர்வாகம் விடுவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் லக்னோ புதிய கேப்டனை ஒப்பந்தம் செய்ய தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு ஆப்பு வைக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளரும், என்சிஏ தலைவருமான விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
ராகுல் டிராவிட்டின் பொறுப்பை விவிஎஸ் லக்ஷ்மணிடம் எடுத்து கொள்ள முடியுமா என்று பிசிசிஐ தரப்பில், கடந்த நவம்பர் மாதம் கேட்கப்பட்டது. ஆனால் விவிஎஸ் லக்ஷ்மணால் அதிகம் பயணிக்க முடியாது என்று கூறி பொறுப்பை ஏற்க முடியாது என்று பதிலளித்தார். அதுமட்டுமல்லாமல் என்சிஏ பொறுப்புக்கும் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளி வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மணை ஒப்பந்தம் செய்ய பல்வேறு ஐபிஎல் அணிகளும் தீவிரமாக இருக்கின்றனர். அந்த வகையில் லக்னோ அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணை கொண்டு வர சஞ்சீவ் கொயங்கா முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஐதராபாத் அணியின் ஆலோசகராக விவிஎஸ் லக்ஷ்மண் நீண்ட காலமாக பணியாற்றி வந்தார்.
இதனால் ஐபிஎல் தொடர் குறித்த அனுபவம் இருப்பதால், விவிஎஸ் லக்ஷ்மணால் லக்னோ அணியை எளிதாக வழிநடத்த முடியும். அதேபோல் இந்திய மைதானங்கள் மற்றும் இளம் வீரர்கள் குறித்து அதிகமான அனுபவங்கள் இருப்பதால், பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.