மும்பை: ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்னும் சில நாட்களில் மும்பையில் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மெகா ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், இம்பேக்ட் பிளேயர் விதிமுறை, ஆர்டிஎம் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்பாக டெல்லி, பஞ்சாப், கேகேஆர், குஜராத் உள்ளிட்ட அணிகள் பல்வேறு மாற்றங்களை நிர்வாக அளவில் செய்யவுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் கேகேஆர் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர்க் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு பொறுப்பாளர்களாக சென்றுவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பேலிஸ் பதவிக் காலம் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் அவரின் பொறுப்புக்கு வேறு ஒருவரை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தேடி வந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளை போல் அல்லாமல் ஐபிஎல் அணிகளுக்கு இந்திய ஜாம்பவான்களை பயிற்சியாளர்களாக கொண்டு வரவே உரிமையாளர்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏனென்றால் ஐபிஎல் தொடரை கம்பீர் மற்றும் சந்திரகாண்ட் பண்டிட் கூட்டணி வென்றதை போல், டி20 உலகக்கோப்பை ராகுல் டிராவிட் வென்று கொடுத்துள்ளார். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் ஜாபர் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இவர் ஏற்கனவே 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். அதன்பின் பஞ்சாப் அணி பயிற்சியாளராக பேலிஸ் வந்த பின், கழற்றிவிடப்பட்டார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநராக சஞ்சய் பங்கர் செயல்பட்டு வரும் சூழலில், தலைமைப் பயிற்சியாளராக வாசிம் ஜாபர் கொண்டு வரப்படவுள்ளது சரியான முடிவாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் 2008 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி, கடைசியாக 2014ஆம் ஆண்டு தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அதன்பின் ஒருமுறை கூட பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு வரவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் திணறும் பஞ்சாப் அணிக்கு வாசிம் ஜாபர் வெற்றியை கொடுப்பாரா என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.