பெங்களூர்: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை என்பது மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதாக க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார். விராட் கோலியின் ஆக்ரோஷத்தை அதிகமாக ரசிப்பேன் என்று கூறியுள்ள அவர், ஆர்சிபி அணிக்காக முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி தரப்பில் நட்சத்திர ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியா ரூ.5.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இவரை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்ட போதும், ஆர்சிபி அணி விடாப்பிடியாக க்ருணால் பாண்டியாவை வாங்கி இருந்தது. நம்பர் 7ல் களமிறங்கும் க்ருணால் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சரி சமமாக பங்களிக்கக் கூடியவர்.

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் க்ருணால் பாண்டியாவால் எளிதாக 4 ஓவர்களை கட்டுக்கோப்புடன் வீச முடியும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் அவரின் பேட்டிங் ஸ்டைலுக்கு பெங்களூர் மைதானம் சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சையத் முஷ்டாக் அலி தொடரில் க்ருணால் பாண்டியா மிகச்சிறப்பாக பரோடா அணியை வழிநடத்தி அரையிறுதி வரை அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஆர்சிபி அணியுடன் இணைந்தது குறித்து க்ருணால் பாண்டியா பேசுகையில், நம் அனைவருக்கும் விராட் கோலி யார் என்பதும், அவர் என்ன செய்துள்ளார் என்பதும் நன்றாக தெரியும். அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. கிரிக்கெட் மீதான அவரின் காதலும், களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமும் அணியின் மற்ற வீரர்களுக்கும் எளிதாக பற்றிக் கொள்ளக் கூடியது.
அவரின் எனர்ஜி எப்போதும் பிடித்தமானது. அவரை போலவே எனக்கும் வெற்றி பெறுவது அதிகமான விருப்பம். களத்தில் என்ன நடந்தாலும் இறுதியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பேன். சில நேரங்களில் அதுதான் நமக்குள் இருக்கும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும். அதேபோல் இறுதியாக கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. தனிநபரின் சாதனையை விடவும் அணி வெற்றி பெறுவது முக்கியமாகும்.
அதேபோல் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது. ஆர்சிபி அணி குறித்து நான் அறிந்தது வரை, அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு கூடுதலாக ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.