மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி சூப்பர் ஸ்டார் வீரர்களை வாங்குவதை விடவும், சூப்பர் ஸ்டார் வீரர்களை உருவாக்குவோம் என்று ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். போல்ட், பட்லர் போன்ற வீரர்களின் விலகலால் ராஜஸ்தான் அணி பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் ரேஸில் இருந்து ராஜஸ்தான் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. கடந்த சில சீசன்களாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணி, இந்த சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறது.

அதற்கு ராஜஸ்தான் அணியில் இருந்த சூப்பர் ஸ்டார் வீரர்களான பட்லர், போல்ட், சாஹல் போன்றவர்களை விடுவித்ததே காரணமாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் கேப்டன் சஞ்சு சாம்சனின் காயம், ரியான் பராக், ஹெட்மயர் மற்றும் ஜுரெல் ஆகியோரின் மோசமான ஆட்டமும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் துணைப் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் பேசுகையில், ஸ்டார் வீரர்கள் தொடர்பாக சில கேள்விகள் எழுந்துள்ளன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை, சாதாரணமாக எங்களின் அணிக்குள் வரும் ஒரு வீரரை, ஸ்டாராக மாற்றுவதே எங்களின் பாலிசி. கடந்த ஆண்டு எந்த ஸ்டார் வீரர்களும் எங்களுக்கு வரவில்லை.
அவர்களை ஸ்டார்களாக உருவாக்கிய பின், வெளியில் சென்றுள்ளார்கள். தற்போது எங்கள் அணியில் உள்ள வீரர்களை ஸ்டார்களாக நிச்சயம் மாற்றுவோம். ராஜஸ்தான் அணி எப்போதும் சூப்பர் ஸ்டார் வீரர்களை வாங்கியதில்லை. மாறாக சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவோம். அதுதான் எங்களின் அடையாளம். 14 வயதாகும் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பாருங்கள்.
அவரின் பேட்டிங்கை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குஜராத் அணிக்கு எதிரான இன்னிங்ஸிக்கு பின் ஒட்டுமொத்த ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதனால் நிச்சயமாக எங்களின் அணியில் உள்ள வீரர்கள், ஸ்டார்களாக மாறுவார்கள். அதனை நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.