மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை அஹமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகிறது.
இந்த நிலையில் விராட் கோலி 18 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மூன்று இறுதிப் போட்டியில் ஆர் சி பி அணி விளையாடியிருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.

தற்போது நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி தகுதி பெற்றுள்ள நிலையில், விராட் கோலி கோப்பையுடன் ஐபிஎல் தொடரை முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், விராட் கோலிக்காக கோப்பையில் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஆர் சி பி அணிக்காக பல ஆண்டுகள் விராட் கோலி விளையாடுகிறார். அது மட்டும் இல்லாமல் இந்திய அணிக்காகவும் பல வெற்றிகளை விராட் கோலி பெற்று கொடுத்திருக்கிறார். இறுதிப்போட்டியில் நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
நாங்கள் இறுதி போட்டியில் வந்து விட்டோம் என்பது குறித்து எல்லாம் யோசிக்கவில்லை. எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்வோம். நாங்கள் எந்த ஒரு மேடைக்காகவும் விளையாடவில்லை. நாங்கள் எதைப் பற்றியும் பெரியதாக யோசிக்கவில்லை. அனைத்து விஷயங்களையும் சிம்பிளாக வைத்துக் கொள்வோம்.
நாங்கள் எங்கு சென்று விளையாடினாலும், அந்த மைதானம் எங்களுக்கு சொந்த மைதானம் போல் எங்களுடைய ரசிகர்கள் மாற்றி விடுவார்கள். அந்த அளவுக்கு எங்கள் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். எங்கள் அணியின் டிம் டேவிட்க்கு உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை குறித்து எனக்கு இன்னும் தெரியவில்லை.
நாளை தான் அது குறித்து தெரியவரும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த தொடரில் கேப்டனாக என்னுடைய பணியை நான் மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றேன் அணியில் இருக்கும் சிறந்த வீரர்களிடம் பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொள்கின்றேன். பல வெளிநாட்டு வீரர்களும் பல பாடங்களை எங்களுக்கு சொல்லித் தருகிறார்கள். இதன் மூலம் என்னுடைய கேப்டன்சி பண்பும் அதிகரித்திருப்பதாக நினைக்கின்றேன். எங்கள் அணியில் ஒரு நல்ல கால சூழலை உருவாக்க வேண்டும் என்று தான் நான் செயல்பட்டு வருகின்றேன் என்று ரஜத் பட்டிதார் கூறியுள்ளார்.