மும்பை: 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 2017 ஆம் ஆண்டுக்கு பின் ரைட் டூ மேட்ச் என்ற விதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ரைட் டூ மேட்ச் (RTM - ஆர் டி எம்) என்றால் என்ன? என்று பார்க்கலாம்.
ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரரை வாங்க பல அணிகளும் போட்டி போடும். பின்னர் ஒரு அணி அதிகபட்ச தொகையை கேட்டு ஏலத்தில் வென்ற பின், அந்த வீரரை கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வைத்திருந்த அணி ரைட் டூ மேட்ச் என்ற அட்டையை பயன்படுத்தி தங்கள் அணிக்கு அதே ஏலத் தொகைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

இந்த விதியில் தற்போது பிசிசிஐ புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அது ஐபிஎல் அணிகளுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனவும், ரைட் டூ மேட்ச் அட்டையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போகும் எனவும் கூறப்படுகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய விதியின் படி ஒரு வீரருக்கு அதிகபட்ச ஏலத் தொகையை ஒரு அணி கேட்ட பின்னர், அவரை முந்தைய ஐபிஎல் தொடரில் வைத்திருந்த அணி ரைட் டூ மேட்ச் என்ற அட்டையை பயன்படுத்தி தங்கள் அணிக்கு கொடுக்குமாறு கேட்கலாம்.
ஆனால். எந்த அணி அவருக்கு அதிக ஏலத் தொகையை கேட்டதோ, அந்த அணிக்கு மீண்டும் ஒருமுறை கூடுதல் ஏலத் தொகையை கேட்க வாய்ப்பு அளிக்கப்படும். அப்படி கேட்கப்படும் தொகையானது எத்தனை மடங்கு வேண்டுமானாலும் அதிகமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு வீரருக்கு 6 கோடி என்ற அதிகபட்ச ஏலத் தொகையை கேட்டு வென்ற பின்னர், ரைட் டூ மேட்ச் அட்டையை மற்றொரு அணி பயன்படுத்தினால், அப்போது அதிக ஏலத் தொகையை கேட்ட அணி அவரது ஏலத் தொகையை 9 கோடியாக அதிகரிக்கலாம் அல்லது 12 கோடியாக கூட அதிகரிக்கலாம்.
அப்படி அதிகரித்த பின் ரைட் டூ மேட்ச் அதிகாரத்தை பயன்படுத்திய அணி அந்த கூடுதல் ஏலத் தொகைக்கு மட்டுமே அவரை வாங்க முடியும். இது ரைட் டூ மேட்ச் அதிகாரத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. மற்றொரு ரைட் டூ மேட்ச் விதியும் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
ஒரு அணி ஒரு வீரரை ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கிய பின்னர் மற்றொரு அணி ரைட் டூ மேட்ச் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த வீரரை வாங்கிக் கொண்டால், ஏலத்தில் போட்டி போட்டு அதிக தொகையை கேட்ட அணிக்கு ஏமாற்றம் ஏற்படும். அதை தவிர்ப்பதற்காக அந்த அணிக்கு கூடுதலாக ஒரு ரைட் டூ மேட்ச் அட்டையை பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, அந்த அணி இதற்கு முந்தைய ஆண்டில் தங்கள் அணியில் இடம் பெற்றிருந்த 6 வீரர்களுக்கு மட்டுமே அதிகபட்சமாக ரைட் டூ மேட்ச் என்ற அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.
ஆனால், ஏலத்தின் போது அவர்களுக்கு கூடுதலாக ரைட் டூ மேட்ச் அட்டை வழங்கப்படும். உதாரணத்திற்கு சிஎஸ்கே அணி இஷான் கிஷனை ஏலத்தில் 10 கோடி ரூபாய் கொடுத்து வென்ற பின்னர், மும்பை இந்தியன்ஸ் அவரை ரைட் டூ மேட்ச் பயன்படுத்தி தங்கள் அணிக்கே பெற்றுக் கொண்டால், அப்போது சிஎஸ்கே அணிக்கு கூடுதலாக ஒரு ரைட் டூ மேட்ச் அட்டை வழங்கப்படும்.