சென்னை: ஐபிஎல் மெகா ஏலம் இன்னும் சில நாட்களில் நடக்க உள்ள நிலையில், அனைத்து ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த் அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறித்து தீவிரமாக விவாதம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சிஎஸ்கே அணி தரப்பில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, சிவம் துபே மற்றும் தோனி ஆகியோரை ரீடெய்ன் செய்துள்ளனர்.
இதனால் இந்த 5 வீரர்களை சுற்றி சிஎஸ்கே அணியை கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதேபோல் தோனிக்கு கடைசி சீசனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அவருக்கான மாற்று வீரர்களை மெகா ஏலத்தில் வாங்க சில முயற்சிகள் எடுக்கப்படலாம். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்திய மாதிரி மெகா ஏலத்தில் தீவிர சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் ஒரு அணியை கட்டமைத்து உள்ளனர்.

அந்த அணியில் ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டு டெவான் கான்வே ரூ.5 கோடிக்கும், ராகுல் த்ரிப்பாட்டி ரூ.8.5 கோடிக்கும், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் ரூ.2.5 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிஎஸ்கே அணியின் சுட்டிக் குழந்தையான சாம் கரண் ரூ.7.5 கோடிக்கும், சீனியர் வீரரான அஸ்வின் ரூ.8.5 கோடிக்கும், ராகுல் சஹர் ரூ.8.5 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தமிழக வீரரான நடராஜன் ரூ.10 கோடிக்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் ரூ.1.25 கோடிக்கும், ஷெர்ஃபானே ரூதர்போர்ட் ரூ.90 லட்சத்திற்கும், நியூசிலாந்து இளம் வீரர் வில்லியம் ஓரூர்க் ரூ.50 லட்சத்திற்கும், இளம் வீரர் யாஷ் தாக்கூர் ரூ.1 கோடிக்கும், சிஎஸ்கேவின் வளர்ப்பான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ரூ.1 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அதர்வா தைடே ரூ.70 லட்சத்திற்கும், சுயாஷ் பிரபுதேசாய் ரூ.50 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 19 வீரர்களை சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் வாங்கி இருக்கின்றனர். இந்த அணியில் எய்டன் மார்க்ரம், சாம் கரண், ராகுல் த்ரிப்பாட்டி உள்ளிட்டோர் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டிருந்தாலும், அஸ்வின் மற்றும் நடராஜனுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் இவ்வளவு தொகை கொடுக்க முன் வருமா என்ற கேள்வி உள்ளது.
ஏனென்றால் சிஎஸ்கே அணியின் கைகளில் ரூ.55 கோடி இருப்பதால், அதிகபட்சமாக 2 வீரர்களுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகை கொடுத்து வாங்க முயற்சிக்கும். மற்ற அனைத்து வீரர்களை குறைந்த தொகையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கவே வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி எப்போதும் நட்சத்திர வீரர்கள் அளவிற்கு பேக் அப் வீரர்களை வாங்குவதில் கவனம் செலுத்தும்.
அந்த வகையில் ஜடேஜாவுக்கு மாற்றாக சுயாஷ் பிரபுதேசாய், டாப் ஆர்டர் வீரர்களான ருதுராஜ், கான்வே, ராகுல் த்ரிப்பாட்டி உள்ளிட்டோருக்கு அதர்வா தைடே மட்டுமே மாற்று வீரராக இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் கட்டமைப்பதில் இருந்த கவனம், பேக் அப் வீரர்களை வாங்குவதில் இல்லை என்று சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.