பெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பின் ஆர்சிபி அணி நிர்வாகத்தால் வாங்கப்பட்ட வீரர்கள் குறித்து விராட் கோலி என்ன சொன்னார் என்பதை அந்த அணியின் இயக்குநர் மோ போபட் தெரிவித்துள்ளார். இம்முறை இந்திய வீரர்களை வாங்குவதே தங்களின் திட்டமாக இருந்ததாக கூறியுள்ள அவர், தினேஷ் கார்த்தின் பங்களிப்பு அதிகம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி இம்முறை நட்சத்திர வீரர்களுக்கு செல்லாமல், இந்திய வீரர்களை அதிகமாக குறி வைத்திருந்தது. சின்னச்சாமி மைதானத்தில் சிறப்பாக செயல்படக் கூடிய வீரர்களையும், அந்த மைதானத்திற்கு ஏற்ப விளையாடும் வீரர்களையும் வாங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வழக்கமால வெளிநாட்டு வீரர்களுக்கு தான் ஆர்சிபி அணி நிர்வாகம் அதிக தொகையை செலவழிக்கும்.

ஆனால் இம்முறை ரீடென்ஷன் தொடங்கி மெகா ஏலம் வரை இந்திய வீரர்களுக்கு தான் அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது. ஜித்தேஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியா, ரஷீத் தார் என்று பிளேயிங் லெவனில் விளையாடக் கூடிய 7 இந்திய வீரர்களையும் ஆர்சிபி அணி சிறப்பாக வாங்கியுள்ளது. அதேபோல் லிவிங்ஸ்டன், பில் சால்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட் என்று பவர் ஹிட்டர்களையும் அள்ளியுள்ளது.
இருப்பினும் ஆர்சிபி அணி கட்டமைத்தது தொடர்பாக விராட் கோலியின் கருத்து என்ன என்பது இதுவரை தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் இயக்குநர் மோ போபட் பேசுகையில், இந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர்களை வாங்குவதே திட்டமாக இருந்தது. அதேபோல் கட்டாயம் ஒரு வீரரை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்பதிலும் தெளிவாக இருந்தோம்.
வெங்கடேஷ் ஐயருக்கு ரூ.22.25 கோடி வரை சென்றதற்கு, அவர் எங்களின் ஸ்டைலில் ஆடக் கூடியவராக இருந்தார். அதேபோல் டாப் ஆர்டரில் விளையாடக் கூடிய இடதுகை இந்திய பேட்ஸ்மேன். அவர் போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட்டில் இல்லை. சாஹல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் எங்களின் திட்டத்தில் இருந்தனர். சாஹலுக்கு இரு மடங்கு பட்ஜெட் போட்டு வைத்திருந்தோம்.
ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக தொகைக்கு சென்றுவிட்டார். அதனால் சாஹலின் தொகையை வைத்து வெங்கடேஷ் ஐயரை வாங்கலாம் என்று முயன்றோம். அவரும் எங்களின் பட்ஜெட்டில் கிடைக்கவில்லை. சிராஜ், டூ பிளசிஸ், வில் ஜாக்ஸ் உள்ளிட்டோருக்கு ஆர்டிஎம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் கட்டமைக்க விரும்பிய அணியில் இருந்து அவர்கள் வேறு மாதிரி வீரர்கள்.
ஆனாலும் மூவரையும் எங்கள் அணியில் இருந்து விட்டது சோகம் தான். கடந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததில் இருந்தே விராட் கோலியுடன் தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறேன். அவரும் லண்டனில் தான் வசிப்பதால், நேரடியாகவே சந்திக்க முடிந்தது. நான், விராட் கோலி மற்றும் ஆண்டி பிளவர் மூவரும் ஆலோசனை செய்திருக்கிறோம். என்ன மாதிரியான வீரர்கள் தேவை என்பது குறித்து பேசினோம்.
இந்திய வீரர்களின் தேவை மற்றும் சின்னச்சாமி மைதானத்திற்கு ஏற்ப தனித்துவமான திறமை கொண்ட வீரர்கள் தேவை என்பதை புரிந்து கொண்டோம். அதுவே ரீடென்ஷனுக்கும் எளிதாக இருந்தது. மெகா ஏலத்தின் போது கூட விராட் கோலி செல்ஃபோனில் தொடர்பில் தான் இருந்தார். தினேஷ் கார்த்திக்கும் அவரும் ஆலோசித்து கொண்டே இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.