மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த நட்சத்திர வீரர் அர்ஷ்தீப் சிங் அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். இதனால் அர்ஷ்தீப் சிங் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஜெட்டா நகரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே அனைத்து அணிகளும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. '

அந்த வகையில் பஞ்சாப் அணியை பொறுத்தவரை பிரப்சிம்ரன் சிங் ரூ.4 கோடிக்கும், ஷஷாங்க் சிங் ரூ.5.5 கோடிக்கும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பஞ்சாப் அணி மெகா ஏலத்தில் ரூ.110.5 கோடி பர்ஸ் தொகை மற்றும் 4 ஆர்டிஎம் வாய்ப்புகளுடன் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளது. இம்முறை பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருப்பதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் அணி மீண்டும் ஆர்டிஎம் கார்டு மூலம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2019ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணியின் முக்கிய வீரராக அர்ஷ்தீப் சிங் செயல்பட்டு வருகிறார். கடந்த மெகா ஏலத்தில் கூட பஞ்சாப் அணியால் அர்ஷ்தீப் சிங் தக்க வைக்கப்பட்டிருந்தார். இதுவரை 65 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 76 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஆனால் பஞ்சாப் அணியால் அர்ஷ்தீப் சிங் ரீடெய்ன் செய்யப்படாதது சில சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதை அர்ஷ்தீப் சிங் நிறுத்தியுள்ளார். அதேபோல் பஞ்சாப் அணி தொடர்புடைய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து அழித்திருக்கிறார். இதனால் பஞ்சாப் அணி மற்றும் அர்ஷ்தீப் சிங் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி அர்ஷ்தீப் சிங்கை ஆர்டிஎம் மூலம் வாங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மெகா ஏலத்தில் இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைப்பது எளிதான விஷயமல்ல. அதிலும் அர்ஷ்தீப் சிங் இரு பக்கமும் ஸ்விங் செய்யக் கூடியவர் என்பதால், அவரை வாங்க பல்வேறு அணிகளும் விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அர்ஷ்தீப் சிங்கை வாங்க கேகேஆர் அணி ஆர்வம் காட்டுவதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக விளையாடிய மிட்சல் ஸ்டார்க் இந்த சீசனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை வாங்க பல்வேறு அணிகளும் பெரிய தொகையுடன் போட்டியிடும். அதனால் கேகேஆர் அணி அர்ஷ்தீப் சிங்கிற்கு அதிக தொகை கொடுக்க முன் வரலாம் என்று கூறப்படுகிறது.