சென்னை: 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரரான டுவைன் பிராவோ இணைந்தார். அதன்பின் சிஎஸ்கே அணியுடன் நீண்ட காலமாக பயணித்து வந்த பிராவோ, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் உடனடியாக சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதற்கு பிராவோவின் டி20 கிரிக்கெட் அனுபவமே முதல் காரணமாக அமைந்தது. ஏனென்றால் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து உலகின் பல்வேறு லீக் போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர். டி20 டெத் ஓவர் பவுலிங்கை முழுமையாக உணர்ந்து செயல்படுபவர் என்பதால், சிஎஸ்கே அணி அவரை வெளியில் விட விரும்பவில்லை.

இதன்பின் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பிராவோ, இளம் வீரர்களான தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங், மதீஷா பதிரானா உள்ளிட்டோருக்கு வழிகாட்டியாகவே இருந்தார். குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவை போல் மைதானத்தை சுற்றி வலம் வரும் பழக்கம் கொண்ட பிராவோ, பவுலர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை அளிப்பார்.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களின் ஒவ்வொரு விக்கெட்டையும் தனது விக்கெட்டை போல் கொண்டாடி மகிழ்வார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக இருந்த டுவைன் பிராவோ, தற்போது கேகேஆர் அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி இந்த ஒப்பந்தத்தை கேகேஆர் அணி நிர்வாகம் சாதித்தது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஆனால் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக டுவைன் பிராவோ விளையாடி வந்துள்ளார். இந்த சீசனில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய போது தான், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்படி பிராவோவுக்கு மிகவும் நெருக்கமோ, அதேபோல் கேகேஆர் அணி நிர்வாகமும் நெருக்கமானது ஒன்று தான். கேகேஆர் அணியின் சிஇஓ வெங்கி மைசூருடன் நல்ல நட்பையும் பிராவோ கொண்டிருந்தார். இந்த நிலையில் கேகேஆர் அணி நிர்வாகம் ஆலோசகர் பதவி அளிக்க முன் வந்துள்ளது. அதேபோல் சிபிஎல் தொடரிலும் பிராவோ பணியாற்றும் வாய்ப்பும் அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
இரு லீக் தொடர்களில் வாய்ப்பு வந்ததால், சிஎஸ்கே அணியை விட்டு டுவைன் பிராவோ கேகேஆர் அணிக்கு சென்றுள்ளார். இது சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு தான் பேரிடியாக அமைந்துள்ளது. தங்களின் ஐகானிக் வீரர் மற்றும் பயிற்சியாளரை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் சோசியல் மீடியாவில் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.