மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்-ஐ ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததற்கான காரணம் குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா விளக்கம் அளித்துள்ளார். ரிஷப் பண்ட் மீது பார்த் ஜிண்டாலுக்கு பாசம் அதிகமாக இருந்ததால், லக்னோ அணி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். ரூ.20.75 கோடியுடன் ஏலம் முடிவடைந்த நிலையில், திடீரென டெல்லி அணி ஆர்டிஎம் செய்வதாக அறிவித்தது.

இதனால் லக்னோ அணி ரிஷப் பண்ட் விலையை ரூ.27 கோடியாக உயர்த்தியது. இதன்பின் வேறு வழியின்றி டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ விட்டுக் கொடுத்தது. டெல்லி அணியால் ரிஷப் பண்ட்-ஐ ரீடெய்ன் செய்யாத நிலையில், மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-க்கு ஆர்டிஎம் கோரியது லக்னோ அணியின் பர்ஸ் தொகையை காலி செய்வதற்காக என்று ரசிகர்களுக்கு புரிந்தது.
ரூ.22 கோடி என்று ரிஷப் பண்ட் விலையை சொல்லியிருந்தால் கூட டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ கொடுத்திருப்பார்கள். ஏனென்றால் ரிஷப் பண்ட் மற்றும் டெல்லி அணி உரிமையாளர்களிடையே மோதல் இருந்தது. இதனை அறிந்தும் ரிஷப் பண்ட்-ஐ அதிக தொகைக்கு வாங்கியது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது.
இந்த விவகாரம் குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசுகையில், ரிஷப் பண்ட்-ஐ வாங்கியதற்கு பின் கொஞ்சம் எமோஷன் மற்றும் சயின்ஸ் இருக்கிறது. ஏனென்றால் டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயரை வாங்குவதற்காக ரூ.26.5 கோடி வரை சென்றார்கள். அதேபோல் டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டாலுக்கு ரிஷப் பண்ட் மீதும் அதிக பாசம் உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் கிடைக்காததால், அவர்கள் ரிஷப் பண்ட்-ஐ வாங்கும் சூழல் ஏற்படலாம் என்று நினைத்திருந்தோம். அதனால் ரிஷப் பண்ட்-ஐ வாங்க கூடுதல் தொகையை செலவிட வேண்டிய நிலை உருவாகலாம் என்று நினைத்திருந்தோம். அதற்கேற்ப ரூ.21 கோடி வரை ஏலம் கேட்கப்பட்டு கொண்டே இருந்தது. இறுதியாக டெல்லி அணி நிர்வாகம் ஆர்டிஎம் கார்டை தூக்கியது.
இதனால் டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ வாங்குவதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று நினைத்தோம். அவர்கள் என்ன காரணத்திற்காக ரிஷப் பண்ட்-ஐ ரீடெய்ன் செய்யவில்லை என்பது தொடர்பாக கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால் ஆர்டிஎம் கார்டை தூக்குவதற்கு முன்பாக சில நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பின் உடனே ஆர்டிஎம் காட்டியதையும் டேபிளில் இருந்து பார்த்தோம்.
அப்போது பார்த் ஜிண்டாலின் முகத்தில் பார்த்த போது, அவர்களுக்கு ரிஷப் பண்ட் கிடைப்பது உறுதி என்பது போல் தெரிந்தது. அதனால் ரூ.27 கோடி தான் எங்களின் பாதுகாப்பான தொகையாக இருக்கும் என்று முடிவு செய்தோம். ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.26.50 கோடி வரை தான் சென்றனர். ஒருவேளை ரிஷப் பண்ட்-க்கு ரூ.27 கோடி கொடுத்து டெல்லி அணி வாங்கியிருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்.
அதேபோல் ரிஷப் பண்ட்-ஐ வாங்கியதற்கான காரணமும் உள்ளது. எங்கள் அணியில் மிடில் ஆர்டரில் இருந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய இந்திய வீரர் தேவை. அவரை சுற்றி ஒரு அணியை கட்டமைக்க விரும்பினோம். ஒருவேளை ரிஷப் பண்ட் கிடைக்கவில்லை என்றால், கொஞ்சம் கடினமாக இருந்திருக்கும்.
ரிஷப் பண்ட்-க்கு நிகரான வெளிநாட்டு வீரர் இருக்கிறார்கள் என்றாலும், லக்னோ அணிக்கு இந்திய வீரர்கள் தேவை. இந்திய அணிக்காக சாதித்த ஒருவரை, தலைமையாக இருக்கும் ஒருவர் தேவையாக இருந்தார். அதனால் மெகா ஏலத்தில் வந்த வீரர்களில் ரிஷப் பண்ட் மட்டுமே அந்த இடத்திற்கு சரியானவராக தெரிந்தார்.
அதேபோல் ஒரு வீரருக்கு ஆர்டிஎம் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தால், அந்த வீரரை எவ்வளவு தொகையாக இருந்தாலும் வாங்கும் நிலையில் அணிகள் இருந்தன. அதேபோல் ரிஷப் பண்ட்-ஐ வாங்க ரூ.30 கோடி வரை லக்னோ அணி சென்றிருக்குமா என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளார்.