மும்பை: சர்வதேச கிரிக்கெட் முதல் ஐபிஎல் தொடர் வரை எந்த போட்டியாக இருந்தாலும் தோனி பேட்டிங் செய்ய வரும் போது, பவுண்டரி எல்லையில் நின்று வானத்தை திரும்பி பார்ப்பது வழக்கம். இதற்கான காரணம் குறித்து பலரும் அறிய முயற்சித்த நிலையில், தற்போது தோனியே விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. இன்னும் ஒரு சீசனில் சிஎஸ்கே அணிக்ககா விளையாட தோனி விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மெகா ஏலத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றும், குறைந்த தொகைக்கு தக்க வைக்க முடியுமா என்று பார்க்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு தோனி அறிவுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக சிஎஸ்கே உரிமையாளர்கள், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் கடந்த வீரர்களை அன்-கேப்டு வீரர்களாக தக்க வைக்கும் விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகத்திடம் கேட்டு கொண்டனர். ஆனால் சிஎஸ்கே அணியின் கோரிக்கைக்கு ஐதராபாத், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தன்னை தக்க வைப்பதற்காக சிஎஸ்கே அணி எந்த சிக்கலிலும் சிக்க கூடாது என்பதில் தோனி கவனமாக இருக்கிறார். இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சிகளில் தோனி தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.
அந்த நிகழ்ச்சியில் தோனி அளித்து வரும் பதில்கள் ரசிகர்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் முதல் ஐபிஎல் தொடர் வரை தோனி பேட்டிங் செய்ய வரும் போது பவுண்டரி லைனில் நின்று வானத்தை பார்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். அதுவும் இடது பக்கம் பார்ப்பது ஏன் என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தோனி, இந்த கேள்விக்கான பதில் எனக்கும் தெரியாது. என் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய குழப்பமே இதுதான் என்று சொல்வேன். ஏனென்றால் பேட்டிங் செய்வதற்கு களமிறங்கும் போது, கால்களில் பேட் எல்லாம் கட்டி பவுண்டரி லைனை கடந்து உள்ளே செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் பவுண்டரி லைன் அருகில் செல்லும் போது, இடது காலினை வைக்க வேண்டுமா அல்லது வலது காலினை வைக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழும்.
இது சாதாரண விஷயம் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் எனக்குள் இந்த குழப்பம் வரும். சில நேரங்களில் இடதுபக்கம் தான் சூரியன் இருக்கும். அது ஒரு காரணமாக இருக்கலாம். சில நேரங்கள் பகலிரவு போட்டியின் போது அப்படி பார்ப்பதே ஒரு பழக்கமாக மாறிவிட்டது. அதேபோல் வலது பக்கம் பார்த்து பழக்கம் இல்லை. எங்கு சென்றாலும் இடது பக்கமே எனது பார்வை இருக்கும்.
சில நேரங்களில் என் மனைவி அந்த பக்கம் தான் அமர்ந்திருப்பார். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் மனைவியின் அனுமதியை கேட்காமல் சென்றால், அதுவும் கூட வீட்டில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். தோனியின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.