சென்னை: நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அகாடமியில் பயிற்சி மேற்கொண்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ரீடெய்ன் செய்யவுள்ள வீரர்களுக்கான பட்டியலில் ரச்சின் ரவீந்திராவின் பெயர் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்களை ரீடெய்ன் செய்யலாம், எத்தனை ஆர்டிஎம் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே பிசிசிஐ தரப்பில் 4 வீரர்களை ரீடெய்ன் செய்யவும், 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்க முடிவு செய்துள்ளது.

அதற்கு முன்பாக சில வீரர்களை ட்ரேட் செய்யவும் அணி நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன. இதில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, பதிரானா மற்றும் சிவம் துபே ஆகிய 4 வீரர்களையும் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2 ஆர்டிஎம் வாய்ப்புகளில் ஒன்றை தீபக் சஹர் மற்றும் கான்வே இருவருக்கும் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா, சிஎஸ்கே அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி நொய்டாவில் உள்ள மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த நிலையில் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அகாடமியில் சக வீரரான பென் சியர்ஸ் உடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சிஎஸ்கே நிர்வாகிகளுடன் ரச்சின் ரவீந்திரா நெருக்கம் காட்டி வருவது அந்த ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்போதும் ஆல்ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். அந்த வகையில் ரச்சின் ரவீந்திரா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பங்களிப்பு செய்யக் கூடியவராக இருக்கிறார். அதேபோல் டாப் ஆர்டரில் எந்த பேட்டிங் வரிசையிலும் ரச்சின் ரவீந்திரா பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர்.
24 வயது மட்டுமே ரச்சின் ரவீந்திரா எட்டியிருப்பதால், எதிர்காலத்திற்கான வீரராகவும் பார்க்கப்படுகிறார். இதனால் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆர்டிஎம் மூலம் தக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் குறைந்த தொகைக்கு ரீடெய்ன் செய்ய ஒப்புக் கொண்டாலும், விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக அவருக்கான ஊதியத்தை சிஎஸ்கே அணி நிர்வாக வழங்கலாம்.
அதேபோல் ரச்சின் ரவீந்திராவை தயார் செய்வதன் மூலமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அடுத்த தலைமுறைக்கான வீரர்களையும் அணிக்குள் கொண்டு வர முடியும். ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்று இருப்பதால், அவருக்கான அணியை உருவாக்க வேண்டிய பொறுப்பும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு உள்ளது. இதனால் சீனியர் வீரர்களை விடவும் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.