ராஞ்சி: சிஎஸ்கே அணியில் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பின் ரவீந்திர ஜடேஜா நீண்ட காலமாக பயணித்து வருகிறார். 2012ஆம் ஆண்டு தொடங்கிய பயணம், இதுவரை எந்த சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது. தோனியின் சிறந்த தளபதியாக இருந்து வரும் ஜடேஜா, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இனி வரும் காலங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஜடேஜா கவனம் செலுத்தவுள்ளார். இதற்கு ஜடேஜாவின் டி20 பேட்டிங்கில் சில பிரச்சனைகள் அதிகரித்ததே காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரிலேயே ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் மட்டுமே ஜடேஜாவால் சிறப்பாக செயல்பட முடிந்தது.

இதனிடையே கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் உள்ள ஜடேஜாவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் உரிய மரியாதை அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிச்சயம் ஜடேஜா மெகா ஏலத்திற்கு முன்பாகவே ரீடெய்ன் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜடேஜா தான் பிறந்த குஜராத் அணிக்காக விளையாட விரும்புவதாக சில தகவல் வெளியாகின.
இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற ஜடேஜா முடிவு செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனியை அவரது பண்ணை வீட்டில் ஜடேஜா சந்தித்திருப்பதாக புகைப்படம் ட்ரெண்டாகியது. விவசாய நிலத்தில் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இது ஜடேஜா எடுத்த செல்ஃபி புகைப்படத்தை, சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தோனியும் இருப்பதாக எடிட் செய்யப்பட்டு வெளியிட்டது தெரிய வந்தது.
துலீப் டிராபி தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா திடீரென ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்து பிசிசிஐ தரப்பிலோ, ஜடேஜா தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. காயமடைந்த ஜடேஜா இதுவரை குணமடையவில்லையோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. மேலும் கடந்த மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஜடேஜாவுக்கு ரூ.16 கோடியிலான ஒப்பந்தத்தை தோனி விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.