மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன் தக்க வைக்கப்படும் 5 வீரர்களில் எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்கள், எத்தனை அன்-கேப்ட் வீரர்களை ரீடெய்ன் செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 3 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதியளிக்கும் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன் ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் எத்தனை வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்கலாம் என்று விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த நிலையில் ரீடெய்ன் செய்யும் வீரர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலமாக அனைத்து அணிகளுக்கும் சாதகம் மற்றும் சிக்கல் ஏற்படும். அதேபோல் பிசிசிஐ தரப்பில் எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்கள், எத்தனை அன்-கேப்ட் வீரர்களை தக்க வைக்கலாம் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் 5 ரீடென்ஷன் மற்றும் ஒரு ஆர்டிஎம் வாய்ப்பில், மொத்தமாக 2 முறையை பின்பற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முதல் முறைப்படி 3 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஒரு ஆர்டிஎம் வாய்ப்பை யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படலாம் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் 2வது முறைப்படி 2 இந்திய வீரர்கள், ஒரு அன்-கேப்ட் வீரர், 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆர்டிஎம் கார்டை பொறுத்தவரை எந்த வீரருக்கு வேண்டுமானாலும் அணிகள் பயன்படுத்தி அனுமதி கொடுக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்படியான விதிகளை பிசிசிஐ அமலுக்கு கொண்டு வந்தால், ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 இந்திய வீரர்களை தான் தக்க வைக்க முடியும். இதனால் நட்சத்திர வீரர்கள் பலரும் மெகா ஏலத்திற்கு வருவார்கள்.
எந்த அணியாலும் கோர் அணியை கட்டமைக்க முடியாது என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரீடெய்ன் பாலிசியில் பிசிசிஐ எந்த விதிமுறையையும் கொண்டு வரவில்லை என்றால், அனைத்து அணிகளும் 6 முக்கியமான வீரர்களை எளிதாக தக்க வைக்க முடியும். உதாரணத்திற்கு திலக் வர்மா போன்ற வீரர்கள் கூட மெகா ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை. இதனால் மெகா ஏலமும் சுவாரஸ்யமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.