சண்டிகர்: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸிங் செய்து பஞ்சாப் அணி சாதனை படைத்திருந்தது. நடப்பாண்டில் குறைந்த ரன்களை டிஃபெண்டிங் செய்து மீண்டும் வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.
111 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்த கேகேஆர் அணி வெறும் 95 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறது. இதற்கு பஞ்சாப் அணியின் ஸ்பின்னரான சாஹல் முக்கிய காரணமாக அமைந்துள்ளாஅர். சிறப்பாக பவுலிங் செய்த சாஹல், 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

அதிலும் கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே, ரகுவன்ஷி, ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் சிங் ஆகிய 4 முக்கியமான பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை சாஹல் சாய்த்தது பஞ்சாப் அணியை வெற்றிபெற செய்தது. இதன் காரணமாக சாஹலுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்பின் சாஹல் பேசுகையில், இந்த வெற்றிக்கு பஞ்சாப் அணியின் அனைத்து வீரர்களும் காரணம்.
குழுவாக நாங்கள் செய்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவடைந்த பின், பாசிட்டிவாக விளையாட வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. பவர் பிளேவில் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். ஏனென்றால் கேகேஆர் அணியின் ஸ்பின்னர்கள் வீசிய பந்துகளில் டர்ன் இருந்தது. அதேபோல் குறைந்த இலக்கு என்பதால், முழுமையாக அட்டாக் செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருந்தோம்.
இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்றால், விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே முடியும். கடந்த போட்டியில் 4 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தேன். ஆனாலும் என் பவுலிங் மீது நம்பிக்கை இருந்தது. எந்த பேட்ஸ்மேனையும் வீழ்த்த முடியும் என்று நம்பிக்கையுடன் பவுலிங் செய்தேன். அதேபோல் வேகத்தையும் மாற்றி, பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சிக்கலை கொடுத்தேன்.
நான் முதல் பந்தை வீசிய போது பந்து கொஞ்சம் டர்ன் ஆகியது. அப்போது உடனடியாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்லிப் வேண்டுமா என்று கேட்டார். அப்போது நான் எந்த வாய்ப்பையும் விட வேண்டாம் என்று நினைத்து, உடனடியாக ஸ்லிப்பை நிறுத்தினோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. பஞ்சாப் அணிக்காக இதுதான் முதல் ஆட்டநாயகன் விருதாகும். என் மீது நம்பிக்கை இருப்பதால், நிச்சயம் வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.