மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி இருந்தது. மொத்தம் உள்ள 70 போட்டிகளில் 58 போட்டிகள் முடிவடைந்தது. இன்னும் லீக் சுற்றில் 12 போட்டிகள் தான் எஞ்சி இருந்தது. லக்னோ அணிக்கு இரண்டு போட்டிகளும் ஹைதராபாத் குஜராத் அணிகளுக்கு மூன்று போட்டிகளும், டெல்லி, சென்னை, பெங்களூர்,மும்பை ஆகிய அணிகளுக்கு இரண்டு போட்டிகளும் எஞ்றிருந்தது.
இதேபோன்று பிளே ஆப் சுற்றில் போட்டிகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த சூழலில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து ஆர்சிபி அணி நல்ல பலமான அணியாக இருக்கின்றது. மும்பை அணியும் 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் 6வது முறையாக கோப்பைவெல்லும் உத்வேகத்துடன் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டி தடைப்பட்டு இருப்பதால் அந்த அணி ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் சஸ்பெண்ட் ஆவது இது முதல் முறையல்ல. கொரோனா காலத்தில் ஏற்கனவே இது போல் இரண்டு முறை சஸ்பெண்ட் ஆகி பின் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் இம்முறை ஐபிஎல் போட்டிகள் கைவிடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருந்தது ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் நிலவுவதால் அந்தத் தொடர் நடைபெறாது. இதன் காரணமாக செப்டம்பர் மாதத்தில் எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு வாரம் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும், அதன் பிறகு, பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களை தவிர்த்து, சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போட்டி நடத்தப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.