மும்பை: ஐபிஎல் தொடரில் எப்போதுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் எது என்பது கடைசி வரை தெரியாமல் இருக்கும். இல்லையென்றால் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு அணி கடைசி நாள் அன்று தான் எது என்றே தெரிய வரும். ஆனால் நடப்பு தொடரில் இன்னும் எட்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் 62 போட்டிகள் முடிந்த நிலையில், பிளே ஆப்க்கு தகுதி பெறும் நான்கு அணிகள் எது என தெரிய வந்துவிட்டது.
அந்த வகையில் குஜராத், rcb, பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆப்க்கு தகுதி பெற்று இருக்கிறது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு பெரிய அளவு சாதகமான சூழல் ஏற்படும். ஏனென்றால் அவர்கள் குவாலிபயர் ஒன்றில் தோற்றால் கூட குவாலிபயர் 2வில் விளையாட மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணி பிளே ஆப் பின் முதல் போட்டியில் தோற்றாலே, தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க எந்த அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
குஜராத் அணி 18 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் அவர்களுக்கு எஞ்சி இருக்கிறது. லக்னோ மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகளுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட குஜராத் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும். ஆர்சிபி அணியை பொறுத்தவரை 17 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ அணிக்கு எதிராக விளையாடுகிறார்கள்.
இதில் இரண்டுமே ஆர்சிபி வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியும். இரண்டிலும் தோற்றால் அவர்கள் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு தள்ளப்படுவார்கள். பஞ்சாப் அணியை பொறுத்தவரை 17 புள்ளிகள் உடன் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அவர்கள் இன்னும் டெல்லி மற்றும் மும்பை என இரண்டு பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் பஞ்சாப் இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டும். இல்லை ஒரு போட்டியில் வென்றால் கூட ஆர்சிபி அணியின் முடிவை பொறுத்தே பஞ்சாப் எந்த இடம் பிடிக்கும் என்பது தெரியவரும்.
மும்பை அணியை பொறுத்தவரை தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறது. 16 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி பஞ்சாப்புக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடுகிறது. இதில் அவர்கள் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளை பெறுவார்கள். ஆனால் ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் தங்களுக்குள் எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அவர்கள் இரண்டாவது இடத்தை பிடித்து விடுவார்கள். இதனால் மும்பை அணி நான்காவது இடத்திலே நிறைவு செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.