சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்ட நிலையில் தற்போது வெறும் இரண்டு போட்டிகள் தான் எஞ்சி இருக்கிறது. 12 போட்டிகள் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் தோல்வியை தழுவி வெறும் மூன்று போட்டிகளில் மட்டும் தான் வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரு போட்டியை சென்னையில் விளையாட வேண்டியது இருந்தது. ஆனால் அந்தப் போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் தோனியை கடைசி முறையாக பார்க்க முடியுமா என்ற ஏக்கம் சென்னை ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த தருணத்தில் பாகிஸ்தான் உடனான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப சென்று விட்டனர். தற்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் எந்த வீரர்கள் இருக்கிறார்கள்? யார் வெளிநாட்டுக்கு சென்று விட்டார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். நியூசிலாந்து வீரர்கள் ரச்சின் ரவீந்தரா மற்றும் கான்வே ஆகியோர் ஏற்கனவே இந்தியாவை விட்டு நாடு திரும்பி விட்டார்கள். இன்னும் இரண்டு போட்டிகள் தான் இருப்பதால் இந்த இரண்டு வீரர்களும் மீண்டும் சென்னைக்கு திரும்புவது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமத் மற்றும் ஸ்ரீலங்கா வீரர் பதிரானா ஆகியோர் சென்னையில் தங்கி இருக்கிறார்கள். அதிலும் நூர் அகமது அடுத்த மாதம் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடப் போகிறார்.
இந்த தொடரில் பங்கேற்க சில விசா நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது இருக்கிறது. இதற்காக அவர் சென்னையில் தங்கி விட்டார் இந்த நிலையில் எந்தெந்த வீரர்கள் தேவைப்படுவார்களோ அவர்களை மட்டுமே அழைக்க பயிற்சியாளர் பிளமிங் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் சிஎஸ்கே அணியில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கு பெறுவது கேள்விக்குறியாக இருக்கிறது.
முக்கியமாக தென்னாப்பிரிக்கா வீரர் பிரவீஸ் ஏற்கனவே ரசிகர்களிடம் பிரியாவிடை பெற்று நாடு திரும்பிவிட்டார். அவர் மீண்டும் திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி வரும் மே 17ஆம் தேதி டெல்லியில் ஒன்றுகூட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வரும் 20ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியும், மே 25ஆம் தேதி குஜராத்துக்கு எதிரான ஒரு போட்டியிலும் சிஎஸ்கே விளையாட போகிறது.