சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு இப்போதே முடிவுக்கு வந்துவிட்டது. அந்த அணி முதல் 8 போட்டிகளின் முடிவிலேயே 2026 ஐபிஎல் தொடருக்கான தயாரிப்புகளைச் செய்யத் தொடங்கிவிட்டது. அது குறித்து அந்த அணியின் கேப்டன் தோனியே வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
அதனால் அந்த அணி தற்போது மாற்று வீரர்களாக 3 இளம் வீரர்களைத் தேர்வு செய்து தயார் செய்து வைத்துள்ளது. மேலும், அஸ்வின் உள்ளிட்ட பல வீரர்களை 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

2026 ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் யார் யார், எந்தெந்த வீரர்களை 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி தக்கவைக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதற்கட்டமாக 3 இளம் வீரர்களைத் தக்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் மிகச் சில போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணி அந்த மூவரைத் தேர்வு செய்துள்ளது.
அதில் ஒருவர் ஆயுஷ் மத்ரே. அவர் தற்போது சிஎஸ்கே அணியில் துவக்க வீரராக விளையாடுகிறார், அதிரடியாகவும் ஆடுகிறார். ஒன்று, இரண்டு போட்டியில் சரியாக ரன் குவிக்க விட்டாலும், இரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடினார். ஒரு போட்டியில் 48 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து தென்னாப்பிரிக்க இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸ். அவர் தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்து வருகிறார். எனவே, அவரையும் சிஎஸ்கே தக்கவைக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட உர்வில் படேலையும் சிஎஸ்கே அணி தக்கவைக்கும் என கூறப்படுகிறது. அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும், அவரை தக்கவைப்பதில் சிஎஸ்கே உறுதியாக உள்ளது.
அதற்கு காரணம், தனது அறிமுகப் போட்டியிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடிய உர்வில் படேல் மூன்றாம் வரிசையில் இறங்கி 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்ததுதான். இதன் மூலம் அவர் நம்பிக்கை அளிக்கும் வீரராக மாறியிருக்கிறார். மேலும் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் என்ற இடத்தில் அவரை ஆட வைப்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் சிந்தித்து வருகிறது. எனவே இவர்கள் மூவரையும் சிஎஸ்கே அணி தக்கவைப்பது உறுதி என கூறப்படுகிறது.
இவர்களைத் தாண்டி சிவம் துபே, காயத்தால் வெளியேறிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகியோரைத் தக்கவைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவெடுக்கும். தோனி விளையாடுவது குறித்து அவர் 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு அறிவிப்பார் எனவும் சிஎஸ்கே நிர்வாகத்தில் கூறப்படுகிறது.
ஒருவேளை தோனி விளையாடாவிட்டால், அதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் உர்வில் படேலை சிஎஸ்கே அணி இப்போதே தேர்வு செய்து வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அதேபோல வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இவர்கள் இருவரும் 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மதீஷா பதிரனா இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்குப் பந்துவீசா விட்டாலும், அவருக்கு மீண்டும் ஒரு ஆண்டு வாய்ப்பு அளிக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவெடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
இவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்களுக்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிகிறது. மற்ற வீரர்களில் ஒன்று, இரண்டு பேரைத்தான் சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்கும். சாம் கர்ரன் மற்றும் ஷேக் ரஷீத் ஆகியோரைத் தக்கவைப்பதற்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது.
அவர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, ஸ்ரேயாஸ் கோபால், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரைத் தக்கவைப்பது மிகவும் கடினமே.
இவர்களில் அன் கேப்ட் (Uncapped) வீரர்களாக அடிப்படை விலையுடன் இருப்பவர்களை சிஎஸ்கே அணி தக்கவைக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவர்களை நீக்கினாலும் ஏலத்திற்கு அதிக தொகை கிடைக்காது. அதே சமயம் அவர்கள் ஏற்கனவே ஓராண்டு சிஎஸ்கே அணியுடன் பயணித்திருப்பதால், சிஎஸ்கே அணியில் என்ன பலம், பலவீனம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
எனவே அவர்களை இன்னும் ஓராண்டு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிக சம்பளம் உடைய மற்ற வீரர்கள் நிச்சயமாக ஏலத்திற்கு முன் நீக்கப்படுவார்கள் என்று சிஎஸ்கே வட்டாரத்தில் கூறப்படுகிறது. 2026 ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி நிச்சயம் அதிக தொகையுடன் தான் ஏலத்தில் பங்கேற்கும். அதை வைத்து சிறந்த வீரர்களை வாங்க முயற்சிக்கும்.