சென்னை: சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோ, கேகேஆர் அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளராக செயல்படக் கூடியவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
சிஎஸ்கே அணிக்காக 2011 முதல் 2022 வரை தொடர்ச்சியாக விளையாடியவர் டுவைன் பிராவோ. டெத் ஓவர்களில் கட்டர்ஸ் மற்றும் ஸ்லோயர் பந்துகளை வீசி சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்த முடியும் என்று டி20 கிரிக்கெட்டில் புதிய திட்டத்தை கொண்டு வந்தவர் அவர் தான். இதன் காரணமாகவே தோனி மனதில் டுவைன் பிராவோவுக்கு பிரத்யேக இடம் உள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பின், உடனடியாக சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக டுவைன் பிராவோவை ஒப்பந்தம் செய்தது. 2 சீசன்களாக சிறப்பாக பணியாற்றிய அவர், தற்போது கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார். கேகேஆர் அணி மட்டுமல்லாமல் நைட் ரைடர்ஸ் பெயரில் 4 லீக் தொடர்களில் இயங்கி வரும் 4 அணிகளுடனும் பணியாற்றவுள்ளார்.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கு 3 பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஆல்பி மோர்கல்.
இவர் சிஎஸ்கே அணிக்காக 2008 முதல் 2013 வரை விளையாடியுள்ளார். அதேபோல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் நமீபியா, வங்கதேசம் அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டிருக்கிறார். அதன்பின் எம்எல்சி லீக் தொடரில் டெக்ஸால் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கும் பட்சத்தில், மீண்டும் சிஎஸ்கே அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் கேகேஆர் அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை கேகேஆர் அணியில் இருந்து பரத் அருண் வெளியேறினால், நிச்சயம் சிஎஸ்கே அணி அவரை ஒப்பந்தம் செய்யும். ஏனென்றால் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனுடன் நல்ல நட்பில் உள்ளவர். அதேபோல் இந்திய மைதானங்கள் குறித்த நல்ல புரிதல் இருப்பவர்.
தொடர்ந்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் எல் பாலாஜி மீண்டும் சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர் 2018 முதல் 2022 வரை சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டவர். சொந்த காரணங்களுக்காக விலகியதால், இம்முறை மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.