சந்திகார்: ஐபிஎல் தொடரில் எப்போதுமே பெயர் முகம் தெரியாத புதுப்புது வீரர்கள் பெரிய சம்பவம் செய்து பிரபலமாவார்கள். ஐபிஎல் தொடரின் தாரக மந்திரமே திறமையும் வாய்ப்பு ஒன்றிணையும் இடம் என்பதுதான். அந்த வகையில் இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக பஞ்சாப் அணியை சேர்ந்த 24 வயது வீரரான பிரியான்ஸ் ஆர்யா ஒரு மிகப்பெரிய சம்பவத்தை செய்து விட்டு சென்று விட்டார்.
இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி ஒரு முனையில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினாலும், மறுபுறம் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலையே படாமல் பிரியான்ஸ் ஆர்யா என்ற வீரர் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.

விக்கெட்டுகள் விழுகின்றது என்ற தடுமாற்றம் கொஞ்சம் கூட சிஎஸ்கே அணிக்கு கிடைக்க விடாமல் தன்னுடைய பேட்டிங்கால் சிஎஸ்கே பவுலர்களை கதறவிட்டார் பிரியான்ஸ் ஆர்யா 7 பவுண்டரி ஒன்பது சிக்ஸர்கள் என 42 பந்துகளில் 103 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 245 ஆகும்.
39 பந்துகளில் சதம் அடித்து நடப்பு சீசனில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் சதம் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத எட்டாவது வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்திருக்கிறது. பிரியான்ஸ் ஆர்யா யார்? அவருடைய சொந்த ஊர் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். பிரியன்ஸ் ஆர்யா சொந்த ஊர் டெல்லி. டெல்லியில் பிறந்து வளர்ந்த பிரியான்ஸ் ஆர்யாவின் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் பணி செய்தார்கள்.
கிரிக்கெட் மீது தனது மகனுக்கு ஆர்வம் இருந்ததால் சஞ்சய் பரத்வாஜ் என்ற பயிற்சியாளர் இடம் தனது மகனை சேர்த்து இருக்கிறார்கள். அங்கு அவர் நல்ல பயிற்சியை பெற்று அபாரமாக விளையாடி வந்திருக்கிறார். இந்த நிலையில் பிரியான்ஸ் ஆர்யாவுக்கு முகவரியை ஏற்படுத்திக் கொடுத்த தொடர் என்றால் டெல்லி பிரிமியர் லீக் தொடர்தான். அதிரடியாக விளையாடக்கூடிய இடதுகை பேட்ஸ்மேன் ஆன பிரியான்ஸ் ஆர்யா டெல்லி பிரிமியர் லீக் தொடரில் ஒரே போட்டியில் 50 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். அதிலும் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசி யுவராஜ் சிங் சாதனையை படைத்தார்.
இதன்மூலம் பிரியான்ஸ் ஆர்யா ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமில்லாமல் சையது முஸ்தாக் அலி தொடரிலும் பிரியான்ஸ் ஆர்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் டெல்லி அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என பெருமை பிரியான்ஸ் ஆர்யாவுக்கு கிடைத்தது. குறிப்பாக சையது முஸ்தாக் அலி தொடரில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார்.
இதில் ஐந்து பவுண்டரி ,10 சிக்சர் அடங்கும். இதனால் பிரியான்ஸ் ஆர்யா பெயர் ஐபிஎல் ஏலத்தில் வந்தவுடன் அவரை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது. அடிப்படை விலையான 30 லட்சம் ரூபாய்க்கு அவருடைய தொகை இருக்க 3 கோடியே 80 லட்சம் ரூபாய் கொடுத்து பஞ்சாப் அணி அவரை வாங்கியது. ஏற்கனவே இந்த தொடரில் குஜராத் அணிக்கு எதிராக பிரியான்ஸ் ஆர்யா 23 பந்துகளில் 47 ரன்கள் அடிக்க தற்போது சிஎஸ்கே எதிராக சதம் அடித்து உலகப் புகழ் பெற்றிருக்கிறார்.