லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்த வருகின்றனர்.
தற்போது பிளே ஆப் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இனி இளம் வீரர்களை அதிக அளவு பயன்படுத்தி சிஎஸ்கே அணி வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் அனைவரின் வாய்களிலும் முதலில் வந்த பெயர் ஷேக் ரஷீத்தான்.

ஏனென்றால் ஷேக் ரஷீத் 2023 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து வருகிறார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஷேக் ரசீத் சிஎஸ்கே அணிக்காக இதுவரை அறிமுகமாகவில்லை என்றாலும் சப்ஸ்டியூட் வீரராக பீல்டிங் செய்து இருக்கிறார். களத்தில் முகமது கையிப் போல் துள்ளி குதித்து பீல்டிங் செய்யக்கூடிய வீரராக ஷேக் ரஷீத் விளங்குகிறார்.
எனினும் சேக் ரஷீதுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து சிஎஸ்கே அணிக்காக அவர் அறிமுகமாகி இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு இந்திய அணி அண்டர் 19 உலக கோப்பையை வென்றது. அந்த அணியில் ஷேக் ரஷீத் தான் துணை கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாருதீன், முகமது கையிப் ஆகியோர்களை கலந்த மாதிரி விளையாட கூடியவர் தான் ஷேக் ரஷீத். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ஷேக் ரஷீத் அபாரமாக விளையாடி 94 ரன்கள் குவித்தார். அந்த அணி வெற்றி பெற ஷேக் ரஷீத் மிகவும் முக்கிய பங்கு ஆற்றினார்.
இதேபோன்று உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் 17 ஆட்டங்களில் விளையாடி 352 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 127 என்ற அளவில் இருக்கின்றது. 17 டி20 போட்டிகளில் 11 சிக்ஸர்களை அடித்திருக்கின்றார். திறமை வாய்ந்த வீரராக ஷேக் ரஷீத் அறியப்பட்டாலும் தற்போது மாறிவரும் டி20 கிரிக்கெட் ஏற்ப அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் இருக்கின்றது.
எனினும் ஷேக் ரஷீத் இடம் பெற்றிருப்பது மூலம் சிஎஸ்கே வின் பீல்டிங் பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக ரஷீத்துக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது ரசிகர்கள் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றுவாரா என்பதை பார்க்கலாம்.