மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீரராக இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எவ்வாறு ஏழ்மை நிலையில் இருந்து புகழின் உச்சிக்கு சென்றார் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக ஜெயிஸ்வால் விளங்குகிறார்.இந்த நிலையில் ஜெய்ஸ்வால் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் அணியால் 18 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டு இருக்கிறார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் கிரிக்கெட்டில் தொடர்ந்து சாதித்து வரும் நிலையில் தற்போது ஜெய்ஸ்வாலின் அண்ணனான தேஜஸ்வி ஜெய்ஸ்வாலும் ஐபிஎல் ஏலத்தில் களம் இறங்கி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. தேஜஸ்வி, 1997 ஆம் ஆண்டு பிறந்தவர். அவருடைய தம்பி யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2001 ஆம் ஆண்டு பிறந்தவர். இருவருக்கும் இடையே நான்காண்டுக்கு மேல் இடைவெளி இருக்கின்றது.

இந்த நிலையில் தம்பி யஷஸ்வி ஜெய்ஸ்வாலை போல் அண்ணனும் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்திருக்கிறார். ஆனால் குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக வேலைக்கு சென்றால்தான் சாப்பாடு என்ற நிலை வந்தது. இதனை அடுத்து தன்னுடைய கிரிக்கெட் கனவை புதைத்துக் கொண்ட தேஜஸ்வி டெல்லிக்கு சென்று விளக்குகளை தெருவில் விற்று வந்திருக்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை தன்னுடைய தம்பி எஸ் ஆர் சி ஜெய்ஸ்வாலுக்கு அவர் அனுப்பி இருக்கிறார்.
இந்த சூழலில் ஜெய்ஸ்வால் கிரிக்கெட்டில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு தற்போது அவருடைய குடும்பம் நல்ல நிலைமையில் இருக்கிறது. இதனை அடுத்து குடும்பத்திற்காக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை அண்ணன் விட்டுவிடக்கூடாது என்று கூறி தனது அண்ணனை மீண்டும் கிரிக்கெட் விளையாட தம்பி யஷஸ்வி ஜெயஸ்வால் அறிவுறுத்துகிறார்.
இதை அடுத்து தேஜஸ்வி ஜெயஸ்வால் மீண்டும் தனது கையில் பேட் மற்றும் பந்தை எடுத்துக் கொண்டு பயிற்சி செய்து கடந்த அக்டோபர் மாதம் உத்திர பிரதேசம் அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது தம்பி போல் இல்லாமல் தேஜஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ஆல்ரவுண்டராக விளங்குகிறார். பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு என இரண்டுமே கலக்கின்றார்.
பேட்டிங்கில் இடது கை பேட்ஸ்மேன் ஆகவும் பந்துவீச்சு வலது கை பவுலர் ஆகவும் இருக்கும் தேஜஸ்வி, இதுவரை நான்கு முதல் தர போட்டிகளில் விளையாடி மொத்தமாக 136 ரன்கள் ஒரு விக்கெட்டும் எடுத்து இருக்கிறார். குறிப்பாக பரோடா அணிக்கு எதிரான ஒரு முக்கிய ஆட்டத்தில் தேஜஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்கள் அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தேஜஸ்வி ஜெயஸ்வால் ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்து இருக்கிறார். இதனால் தம்பியை போல் அவரும் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். குடும்பத்திற்காக தனது கனவை இழந்த அண்ணனை மீண்டும் அவரது கனவை நோக்கி தம்பி வர வைத்திருக்கும் சம்பவம் ரசிகர்களை நிகழ்ச்சி அடைய செய்திருக்கிறது.