சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருவதற்கு இளம் வீரர்களுக்கு பெரிய அளவு வாய்ப்பு வழங்கப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக சிஎஸ்கே அணி நம்பி எடுத்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி, பொதுவாக சிஎஸ்கே அணியில் நாம் எந்த மாற்றத்தையும் அதிகமாக செய்ய மாட்டோம்.
ஆனால் இந்த தொடரில் அதிக மாற்றங்கள் செய்ய வேண்டியது இருந்தது. ஏனென்றால் ஒருவர் இருவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒட்டுமொத்தமாக ஒரு அணியும் சரியாக விளையாடாமல் போனதால் இந்த மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருந்தது என்று கூறியுள்ளார். அந்த வகையில் ரச்சின் ரவிந்த்ரா, கான்வே, ராகுல் திருப்பாதி, விஜய் சங்கர்,ஷாம் கரன் தீபக் ஹூடா போன்ற வீரர்கள் இருந்து அடிக்கடி மாற்றப்பட்டனர்.

இந்த சூழலில் சிஎஸ்கே அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள இயன் பிஷப், டெல்லி பிரீமியர் லீக் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வான்ஸ் பேடி இன்னும் பெஞ்சில் தான் சிஎஸ்கே அணி அமர வைத்திருக்கிறது. ஆனால் அந்த தொடரில் இரண்டாவது அதிகபட்ச சிக்சர் அடித்த பிரியன்ஸ் ஆரியா தற்போது பஞ்சாப் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.
சிஎஸ்கே ஏன் வான்ஸ் பேடியை களம் இறக்கவில்லை என தெரியவில்லை என்று கேள்வியை எழுப்பி உள்ளார். இதுதான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சிஎஸ்கே அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் அவர்களை சரியான நேரத்தில் ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் அணிக்குள் கொண்டுவரப்படும் இளம் வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடக்கூடாது என்றும், கவர் டிரைவ் போன்ற ரிஸ்க் இல்லாத ஷாட்கள் மட்டும் தான் ஆட வேண்டும் என்றும் கூறப்படுவதாக தெரிகிறது. உதாரணத்திற்கு ஆயுஷ் மாத் ரே, சேக் ரசித் போன்ற வீரர்கள் அதிரடியாக ஆட தெரியும்.
ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு வீரர்களும் தற்காப்பு ஆட்டத்திலே அதிகமாக ஈடுபட்டார்கள்.இதனால் வலை பயிற்சிக்கு தாங்கள் சொல்வதைக் கேட்காமல் இருக்கும் வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் சிஎஸ்கே அணி வாய்ப்பு வழங்குவது இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.