மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியல் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணியில் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டி20 கிரிக்கெட்டில் மற்ற அணிகள் எல்லாம் 200 ரன்களுக்கு மேல் அடித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி இன்னும் பழைய டெஸ்ட் மேட்ச் ஆடுவது போல் மெதுவாக விளையாடுவதாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.
இன்றைய ஆட்டத்தில் கூட சிஎஸ்கே அணி பவர்பிளேவில் முதல் இரண்டு ஓவர்களில் மொத்தமாகவே எட்டு ரன்கள் தான் அடித்து இருந்தது. எனினும் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 32 ரன்களும், ஜடேஜா 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அசத்தினர். இதேபோன்று நடு வரிசையில் களம் இறங்கிய சிவம் துபே 32 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் என கௌரவமான இலக்கை எட்டியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கருப்பு பேட்ஜ் எதுவும் அணியாத நிலையில் திடீரென்று பந்து வீசும் போது கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடி வந்தனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏன் சிஎஸ்கே வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருக்கிறார்கள் என்று பலரும் குழம்பி வருகின்றனர். அப்போதுதான் அந்த செய்தி தெரிய வந்தது. சிஎஸ்கே அணி வீரர்கள் பேட்டிங் முடித்துவிட்டு பெவிலியன் சென்ற போது ,சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கும் வெளிநாட்டு வீரரான கான்வேவின் தந்தை காலமானதாக செய்தி வந்துள்ளது. இதனால் சிஎஸ்கே வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கான்வேவின் தந்தைக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவருடைய சோகத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு சிஎஸ்கே வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்தத் தொடரில் கான்வே வெறும் மூன்று போட்டிகளில் விளையாடி 94 ரன்கள் எடுத்தார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 69 ரன்கள் ஆகும். கான்வேவின் ஸ்ட்ரைக் கிரேட் 127 என்ற அளவில் இருந்தது. இந்த தொடரில் அவர் 9 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடித்திருக்கிறார். இந்த நிலையில் கான்வேவின் தந்தை காலமானதால் அவர் அணியை விட்டு செல்ல இருக்கிறார்.