மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் தரப்பில், ஒரேயொரு கோரிக்கை மட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது 2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த ஐபிஎல் விதியான, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் கடந்துவிட்ட வீரர்களை அன்கேப் வீரர்களாக தக்க வைக்கலாம் என்பதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டது. இதற்கு ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இதன் மூலமாக தோனியை இன்னொரு சீசனில் விளையாட வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் விரும்புவது தெரிய வந்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் முழுமையான திறனை வெளிப்படுத்தவில்லை. சிஎஸ்கே ரசிகர்கள் ருதுராஜ் கெய்க்வாடை அடுத்த சூப்பர்ஸ்டாராக ஏற்றுக் கொண்டாலும், அவர் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து செல்லாதது சில விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனால் அடுத்த சீசனில் தோனி ருதுராஜ் கெய்க்வாட் உடன் கூடுதல் நேரம் செலவிடும் போது அவரால் விரைந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தோனியை அடுத்த சீசனில் விளையாட சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.
அதேபோல் தோனிக்கு பின் சிஎஸ்கே அணியில் பெரிய சூப்பர் ஸ்டார் வீரர் இல்லை. ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இன்னும் நிரந்தர இடத்தை கூட பிடிக்கவில்லை. இதனால் பொருளாதார ரீதியாக சில பின்னடைவுகளை சிஎஸ்கே அணி நிர்வாகம் சந்திக்க வேண்டிய சூழல் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் சிறிய தொகைக்கு தோனியை தக்க வைக்க முடிந்தால், சிஎஸ்கே அணியின் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்கும். இம்பேக்ட் பிளேயராக சில போட்டிகளிலும், பிளேயிங் லெவனில் சில போட்டிகளிலும் விளையாடினாலே சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தோனியால் எளிதாக பூர்த்தி செய்துவிட முடியும் என்று நம்பப்படுகிறது.