உலகக் கோப்பை சூப்பர் ஓவர் நாயகனை புறக்கணித்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. சஞ்சு சாம்சன் செய்த சொதப்பல்
டெல்லி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தீப் சர்மாவை பந்து வீச வைத்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜோப்ரா ஆர்ச்சர் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி இருந்தார், ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் என்ற விகிதத்தில் விட்டுக் கொடுத்திருந்தாலும், அவர் அதிக வேகத்தில் வீசி இருந்தார். மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.
அவரைத்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூப்பர் ஓவரில் பந்து வீச அழைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில். அவர் 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் பந்து வீசி இருந்தார். அப்போது இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி உச்சபட்ச போட்டியான உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலேயே சூப்பர் ஓவர் வீசிய அனுபவம் வாய்ந்த ஜோப்ரா ஆர்ச்சருக்கு அந்த வாய்ப்பை அளிக்காமல் சந்தீப் சர்மாவுக்கு அளித்தது ஏன்? என பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அதுவே இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 188 ரன்கள் எடுத்தது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 188 ரன்கள் எடுத்தது. அப்போது போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்தீப் சர்மா முதல் மூன்று ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அவரது அந்த மூன்று ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.
ஆனால், அவர் கடைசி ஓவரில் நான்கு வைடு மற்றும் ஒரு நோபாலை வீசியிருந்தார். மேலும் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸையும் விட்டுக் கொடுத்திருந்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். எனவே, சந்தீப் சர்மா ஒரு ஓவரில் மிகப்பெரிய தவறை செய்ததால் தான் இந்தப் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது என பலரும் அப்போது விமர்சித்து வந்தனர்.
என்னதான் மூன்று ஓவர்கள் கட்டுக்கோப்பாக வீசியிருந்தாலும், அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நிலையில் கடைசி ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை அடித்து ஆடியது. மேலும் அவரும் பதற்றத்தில் அதிக வைடு வீசி தவறுகளையும் செய்திருந்தார். கிட்டத்தட்ட இருபதாவது ஓவரில் செய்த தவறுகளை சூப்பர் ஓவரிலும் அவர் செய்ய மாட்டார் என்று சொல்ல முடியாத நிலையில் அவரையே மீண்டும் சூப்பர் ஓவரில் பந்து வீச அழைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன்.
சந்தீப் சர்மா சூப்பர் ஓவரில் வீசிய நான்கு பந்துகளில் 13 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் சூப்பர் ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சந்தீப் சர்மா சூப்பர் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரை விட்டுக் கொடுத்திருந்தார். ஒருவேளை ஜோப்ரா ஆர்ச்சர் சூப்பர் ஓவரில் பந்து வீசி இருந்தால் இந்தப் போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும் என பலரும் தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications