டெல்லி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் அதற்கு முக்கிய காரணமே அந்த அணி நித்திஷ் ராணாவை பேட்டிங் செய்ய அழைக்காதது தான் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 188 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய போது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார்.

சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். ரியான் பராக் 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்து இருந்தார். அதிரடியாக ஆடிய நித்திஷ் ராணா 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார்.
துருவ் ஜுரல் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். ஷிம்ரான் ஹெட்மையர் 9 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது நித்திஷ் ராணா தான். அதே சமயம் அதிக சிக்ஸர்களை அடித்தது யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.
எனவே, இவர்கள் இருவரைத்தான் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய முதலில் அழைத்து இருக்க வேண்டும். ஆனால், ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் சூப்பர் ஓவரை சந்திக்க முதலில் வந்தனர். ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டமிழந்து இருந்த நிலையில் அவரை எதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய அழைத்தார்? என பலரும் குழப்பத்தில் இருந்தனர்.
ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் அவரை ஆட வைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், நித்திஷ் ராணாவோ, ஜெய்ஸ்வாலோ அவருடன் சேர்ந்து பேட்டிங் செய்திருக்க வேண்டும். அங்கு தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவறு செய்தது. சூப்பர் ஓவரில் ஷிம்ரான் ஹெட்மையர் ஒரு பவுண்டரி அடித்தார். ரியான் பராக் ஒரு பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
ஐந்தாவது பந்தில் ஷிம்ரான் ஹெட்மையர் ரன் அவுட் ஆனார். சூப்பர் ஓவரில் மூன்றாவது வரிசையில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு ஒரு பந்து கூட பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஒருவேளை நித்திஷ் ராணா மற்றும் ஜெய்ஸ்வாலை முதலில் அனுப்பி இருந்தால் அவர்கள் இருவரும் ஒன்று அல்லது இரண்டு சிக்ஸர்களை அடித்து இருப்பார்கள். மேலும், சில ரன்களையும் சேர்த்திருப்பார்கள். எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூப்பர் ஓவரில் யாரை பேட்டிங் செய்ய வைப்பது என்பதில் தான் தவறு செய்திருக்கிறது என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ராஜஸ்தான் நிர்ணயித்த 12 ரன்கள் என்ற இலக்கை டெல்லி அணி நான்காவது பந்திலேயே எட்டி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.