சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
சிஎஸ்கே அணி மெகா ஏலத்திற்கு பிறகு பல புதிய வீரர்களை வாங்கி அணியின் பலத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த சூழலில் கடந்த நான்கு ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இரண்டு முறை கோப்பையை வாங்கி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரானா தான். மலிங்கா போல் பந்து வீசும் பதிரானா, சிஎஸ்கே அணியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக விளங்கினார். பதிரானா எப்போதெல்லாம் சிறப்பாக செயல்படுகிறாரோ, அப்போதெல்லாம் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. இந்த சூழலில் கடந்த 2024 ஆம் ஆண்டு பதிரானா காயம் காரணமாக பாதியில் விலகினார்.
இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. இந்த நிலையில் பதிரானா இன்றைய ஆட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிளேயிங் லெவனில் பதிரானா இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பதிரானா நல்ல உடல் தகுதியுடன் இருந்தபோது ஏன் அவர் சேர்க்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இதற்கு காரணம் என்னவென்று தற்போது பார்க்கலாம். பதிரானா கடந்த சீசனின் போது ஏற்பட்ட காயத்திற்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினாலும், அவர் பழைய மாதிரி பந்து வீசவில்லை. மேலும் பதிரானா தன்னுடைய பந்துவீச்சு ஸ்டைலில் சில மாற்றங்களை செய்து இருக்கிறார். இதனால் அவருடைய பவுலிங் பழைய மாதிரி இல்லை.
இந்த சூழலில் சிஎஸ்கே அணி நடத்திய பயிற்சி ஆட்டத்திலும் பதிரானா, அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாக பதிரானா மீண்டும் பழைய மாதிரி பந்து வீசினால் மட்டுமே அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் எலிஸ் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனும் அணியில் இருப்பதால் பதிரானா முக்கியத்துவம் தற்போது குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டால் அவர் பிளேயிங் லெவனுக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.