சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி தோனியை வெற்றியுடன் வழி அனுப்பி வைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் தோனி அணி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
குறிப்பாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 43 வயதான தோனி தற்போது பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது வீரராக ஆர்சிபிக்கு எதிராக களம் இறங்கியது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தோனி நான்காவது அல்லது ஐந்தாவது வீரராக களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிரடியாக விளையாடினாலும் கடைசி இரண்டு ஓவரில் வந்து விளையாடினால் எந்த பயனும் இல்லை என்று விமர்சித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தோனியை காப்பாற்றுவதற்காக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் அளித்த நேர்காணல் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதில் "தோனியின் கால் முட்டி முன்பு இருந்ததற்கு தற்போது பரவாயில்லை. எனினும் தோனியால் தொடர்ந்து பத்து ஓவர் நின்று பேட்டிங் செய்து ரன் ஓட முடியாது. இதனால் தான் அவர் பேட்டிங் வரிசையில் கீழே இறங்குவதாக" பிளமிங் கூறினார். தற்போது பிளமிங் இந்த பேட்டியை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள், தோனிக்கு கால் இன்னும் சரியாகவில்லை என்றால் அவர் ஏன் விளையாட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரசிகர்கள் கோபம்:
உடல் தகுதி 100 சதவீதம் இல்லாத நிலையில் தோனி ஏன் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து இருப்பதாகவும், அவருக்கு பதில் வேறொரு இளம் வீரர் விளையாட வாய்ப்பு தரலாமே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிஎஸ்கே அணியை விட தோனி ஒன்றும் பெரிய ஆள் கிடையாது என்றும், அணியின் வெற்றிக்காக தான் தோனி விளையாட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
தோனி முடியவில்லை என்றால் அவர் பிளேயிங் லெவனில் இருப்பதே அவசியம் இல்லை என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் தோனி உடல் தகுதி குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரல் ஆகி வருகிறது. அதில் சேவாக், சச்சின் கம்பீர் போன்ற வீரர்கள் அணியை விட்டு நீக்கப்பட்டபோது எதிர்ப்பு கிளம்பியது.
தோனியின் பழைய பேட்டி:
அதற்கு பதில் அளித்த தோனி, "உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம். 100% உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அணியில் விளையாட முடியும். எனக்கு 100% உடல் தகுதி இல்லை என்று எனக்கு தெரிந்தால் நான் நிச்சயம் அணியில் இருக்க மாட்டேன். எனக்கு பதில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு நான் விலகி விடுவேன். காயம் இருப்பதை மறைத்து விளையாடுவதன் மூலம் அது அணிக்கு மட்டுமல்லாமல் அது ரசிகர்களையும் ஏமாற்றும் செயலாகும்."
"நான் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இதனால் என்னுடைய உடல் தகுதியில் சிக்கல் இருக்கிறது என தெரிந்து கொண்டால், நான் போட்டிகளில் இருந்து விலகி விடுவேன்" என்று தோனி கூறியிருந்தார். தோனி சொன்னது போல் இந்திய அணியில் இருந்து விலகி விட்டார். ஆனால் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வருவது தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது பிளமிங்கின் கூற்று மூலம் தோனியின் கால் இன்னும் 100% சரியாகவில்லை.
அவரால் முன்பு போல் விளையாட முடியாது என தெளிவாக தெரிந்து விட்டது. அப்படி இருக்கும்போது தோனி தன்னுடைய பேச்சை மாற்றி தற்போது நடந்து கொள்கிறார் என்ற புகாரும் எழுந்துள்ளது. இந்த சூழலில் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் கடைசி 5 ஓவர்களில் எவ்வளவு பந்து பிடித்திருக்கிறார்? எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.
டெத் ஓவரில் தோனி :
கடைசி 5 ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 385 பந்துகளை எதிர் கொண்டு 763 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 198 ஆகும். தோனி 19 முறை ஆட்டம் இழந்திருக்கிறார். வெறும் 27 சதவீத டாட் பந்துகளை மட்டுமே வீணடித்திருக்கிறார். இதே கால கட்டத்தில் டெத் ஓவர்களுக்கு எதிராக சுழற் பந்துவீச்சாளர்களை இறுதிக்கட்டத்தில் எதிர்கொள்ளும் போது தோனியின் ஸ்ட்ரைக் ரேட் வெகுவாக குறைந்து இருக்கிறது.
தோனி இந்த ஆறு ஆண்டுகளில் கடைசி கட்டத்தில் வெறும் 87 பந்துகளை மட்டுமே சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எதிர்கொண்டு இருக்கிறார். இதில் அவர் அடித்திருக்கும் ரன்கள் 106 ஆகும். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தோனியின் ஸ்ட்ரைக் ரேட் கடைசி 5 ஓவர்களில் 121 என்ற அளவில் இருக்கிறது. தோனியின் டாட் பால் சதவீதம் 44 என்ற அளவில் இருக்கிறது. சராசரியாக 26 ரன்களும் நான்கு முறையும் ஆட்டம் இருந்திருக்கிறார்.
குறிப்பாக இறுதிக்கட்டத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு பந்து வீச மாட்டார்கள் என்றாலும் அப்படி வீசினால் தோனி இந்த ஆறு ஆண்டுகளில் கடுமையாக ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறி இருக்கிறார். சரி தோனி சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக கடந்த ஆறு ஆண்டுகளில் ஏழாவது ஓவரிலிருந்து 15 வது வரை எத்தனை பந்துகளை எதிர்கொண்டு இருக்கிறார்.
நடு ஓவர்களில் தோனியின் செயல்பாடு:
எவ்வளவு ரன்களை அடித்திருக்கிறார் என்று பார்த்தால் உங்களுக்கு ஒரு உண்மை புரியும். தோனி இந்த காலகட்டத்தில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 248 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 227 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 91 என்ற அளவில் இருக்கிறது. அவருடைய டாட் பால் சதவீதம் 45 என்று இருக்கின்றது. ஐந்து முறை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆட்டம் இழந்திருக்கிறார்.
இதே காலகட்டத்தில் இது நடு வரிசை ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக தோனி 186 பந்துகளை எதிர் கொண்டு 153 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 82 ஆகும். இதில் தோனியின் டாட் பால் சதவீதம் 44 என்ற அளவில் இருக்கிறது. இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் தோனி கடைசி 5 ஓவர்களில் மட்டும் வேக பந்துவீச்சாளருக்கு எதிராக அபாரமாக விளையாடி இருக்கின்றார். இதுவே நடு ஓவர்களில் பார்த்தால் தோனியின் புள்ளி விவரங்கள் மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் தான் தோனி களத்தில் முன் நின்று பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.