சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கம்? பண்ட்டுக்கு பதவி? பரவும் தகவல்.. உண்மை என்ன?
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்படுவார் என சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்வார் என தகவல்கள் வெளிவந்து கொண்டு இருப்பது தான். தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட், அந்த அணியில் இருந்து விலக உள்ளதாக ஒரு தகவல் உள்ளது.
அவர் அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இணைந்தால் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் எனவும், தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் ரிஷப் பண்ட், ருதுராஜ் கெய்க்வாட்டை விட அதிக அனுபவம் கொண்ட வீரர் என்பதால் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும், ருதுராஜ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையா என சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல்கள் இதுதான் -
2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடக்க உள்ளது. அப்போது ஒவ்வொரு அணியும் மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். ரிஷப் பண்ட் ஒருவேளை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விலக நினைத்தால் அந்த அணி அவரை தக்க வைக்காது. ரிஷப் பண்ட் ஏலத்தில் தான் மீண்டும் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதோடு, அதிரடி பேட்ஸ்மேனும் ஆவார். மேலும், அவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. எனவே, அவரை வாங்க ஏலத்தில் கடும் போட்டி நிலவும். அப்போது சிஎஸ்கே அணி அவரை வாங்க நினைத்தாலும் மற்ற அணிகளுடன் கடும் போட்டி போட்டுத் தான் வாங்க வேண்டும். அப்போது தங்களிடம் எவ்வளவு தொகை உள்ளது என்பதை எல்லாம் பார்த்துத் தான் சிஎஸ்கே அணியால் அவரை வாங்க முடியும்.
அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பே இல்லை எனவும் சிஎஸ்கே வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவர் 2024 ஐபிஎல் தொடருக்கு இரண்டு ஆண்டுகள் முன்பிருந்தே கேப்டன் பதவிக்காக தயார் செய்யப்பட்டு இருக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத போதும் அவரது கேப்டன்சியில் பெரிய குறைகள் எதுவும் இல்லை என சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது.
எனவே, அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், தோனியே ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியின் கீழ் ஆடும் போது, வேறு எந்த முக்கிய வீரர் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டாலும், அவர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் தான் ஆட வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications